தூத்துக்குடி அருகே கடலில் மீன்பிடிக்க சென்ற 31 மீனவர்களின் கதி என்ன? கடலோர காவல்படையினர் தேடுகிறார்கள்


தூத்துக்குடி அருகே கடலில் மீன்பிடிக்க சென்ற 31 மீனவர்களின் கதி என்ன? கடலோர காவல்படையினர் தேடுகிறார்கள்
x
தினத்தந்தி 30 Oct 2019 11:11 PM GMT (Updated: 30 Oct 2019 11:11 PM GMT)

தூத்துக்குடி அருகே கடலில் மீன்பிடிக்க சென்ற 31 மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், அவர்களின் நிலை என்ன? என்பது குறித்து பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் மன்னார்வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதியில் சுமார் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். மீனவ கிராமங்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகள், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

அதே நேரத்தில் தருவைகுளம் பகுதியில் இருந்து தங்கு கடல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கும் தகவல் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டு, உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி பெரும்பாலான மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கரைக்கு திரும்பினர்.

31 பேர் கதி என்ன?

ஆனால் கடந்த வாரம் தருவைகுளத்தில் இருந்து 3 படகுகளில் தலா 9 பேர் வீதம் 27 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் லட்சத்தீவுக்கும், கொச்சிக்கும் இடையே வந்து கொண்டு இருந்தபோது, அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. செயற்கைகோள் தொலைபேசி, வயர்லெஸ் உள்ளிட்ட பல்வேறு கருவிகள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் 3 படகுகளில் இருந்த மீனவர்களும் எங்கு உள்ளனர்? என்பது தெரியவில்லை.

அதேபோன்று தருவைகுளத்தில் பதிவு செய்யப்பட்டு, கொச்சியில் இருந்து மீன்பிடிக்க சென்ற படகில் தருவைகுளம் மீனவர்கள் 4 பேர் உள்பட 10 பேர் இருந்தனர். அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தருவைகுளத்தை சேர்ந்த 31 பேர் உள்பட 37 மீனவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

தேடும் பணி தீவிரம்

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி மற்றும் கொச்சி கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், அந்த மீனவர்களை தொடர்பு கொண்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Next Story