தமிழகத்தில் 4 நாட்கள் மழை நீடிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 4 நாட்கள் மழை நீடிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 1 Nov 2019 1:29 PM GMT (Updated: 1 Nov 2019 1:29 PM GMT)

வடகிழக்கு பருவக்காற்று சாதகமாக வீசுவதால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவான மஹா புயல் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேசிய போது, “தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்று சாதகமாக வீசி வருவதால் அடுத்த 3, 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

மஹா புயல் கோவாவிற்கு தென்மேற்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும், மங்களூரில் இருந்து வடமேற்கே 460 கிலோமீட்டர் தொலைவிலும், லட்சத்தீவுகளுக்கு உட்பட்ட அமிந்தி தீவில் இருந்து வடமேற்கே 450 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது மையம் கொண்டுள்ளது. 

அடுத்த 12 மணி நேரத்தில் இந்த புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறும். வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல் வரும் 6 ஆம் தேதி குஜராத்தை அடையும். எனவே மஹா புயலால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. 

மேலும் அந்தமான் கடற்பகுதியில் வரும் 3 ஆம் தேதி புதிய மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகிறது. இது அதற்கடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற வாய்ப்புள்ளது. இதுவும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை.
 
அந்தமான் கடற்பகுதியில் ஏற்படும் புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 4, 5 ஆம் தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

Next Story