கடலூரில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் கைது


கடலூரில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 2 Nov 2019 9:30 PM GMT (Updated: 2 Nov 2019 8:38 PM GMT)

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த கம்ப்யூட்டர் மைய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையத்தில் இருந்து போலி வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருவதாக மாவட்ட கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் சென்றது. கலெக்டர் அன்புசெல்வன், இதுபற்றி உரிய விசாரணை நடத்த கடலூர் கோட்டாட்சியரும், வாக்காளர் பதிவு அலுவலருமான ஜெகதீஸ்வரனுக்கு உத்தரவிட்டார்.

புதுப்பேட்டை கோட்லாம்பாக்கம் கிராமத்துக்கு சென்று, அங்குள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் ஷேக் பரீத் (வயது 46) என்பவர் ஒரு கார்டில் பிரிண்ட் எடுத்து வாக்காளர் அடையாள அட்டையில் தேர்தல் பதிவு அலுவலர் என்ற இடத்தில் கையெழுத்தை போலியாக பதிவு செய்தது தெரியவந்தது.

கைது

இது தவிர போலியாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு அச்சடித்து வழங்கி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஷேக் பரீத் போலியாக வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கி வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கம்ப்யூட்டர்கள், பிரிண்டர், போலி அடையாள அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் போலி அடையாள அட்டைகளை தயாரித்து யாருக்கெல்லாம் கொடுத்தார். போலி பாஸ்போர்ட் தயாரித்து உள்ளாரா? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story