சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம் 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு


சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம் 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 2 Nov 2019 11:29 PM GMT (Updated: 2 Nov 2019 11:29 PM GMT)

தமிழகம் முழுவதும் 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

உள்துறை முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி நேற்று பிறபித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

* சேரன்மாதேவி உதவி எஸ்.பி. ஆசிஸ் ராவத் பதவி உயர்வு பெற்று, டெல்லி தமிழ்நாடு கமாண்டன்ட் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியில் இருந்த ஜனகன், ராஜபாளையம் சிறப்பு பட்டாலியன் பிரிவு கமாண்டன்ட் ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* ராஜபாளையம் சிறப்பு பட்டாலியன் பிரிவு கமாண்டன்ட் ஜெயந்தி, ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழுமம் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இப்பதவி வகித்த செல்வநாகரத்தினம் நாகப்பட்டினம் எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

* நாகப்பட்டினம் எஸ்.பி.யாக இருந்த டி.கே.ராஜசேகரன், வடசென்னை போக்குவரத்து துணை கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார். வடசென்னை போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஷியாமலா தேவி, தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

* தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி.யாக இருந்த விஜயலட்சுமி பதவி உயர்வு பெற்று, சென்னை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரிவின் டி.ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று குளச்சல் உதவி எஸ்.பி. கார்த்திக், பதவி உயர்வு பெற்று மதுரை சட்டம்-ஒழுங்கு துணை-கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* மதுரை சட்டம்-ஒழுங்கு துணை-கமிஷனராக பணியாற்றி வந்த சசிமோகன், நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார். இப்பதவியில் கலைச்செல்வன், சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர்

* ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ராஜேஷ் கண்ணன் பதவி உயர்வு பெற்று, சென்னை புளியந்தோப்பு துணை-கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியில் இருந்த சாய்சரண் தேஜஸ்வி, தேனி மாவட்ட எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

* தேனி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பாஸ்கரன், பூந்தமல்லி சிறப்பு பட்டாலியன் கமாண்டன்ட் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியில் இருந்த ஜெயவேல், உளுந்தூர்பேட்டை சிறப்பு பட்டாலியன் கமாண்டன்ட் ஆக மாற்றப்பட்டு உள்ளார்.

* உளுந்தூர்பேட்டை சிறப்பு பட்டாலியன் கமாண்டன்ட் ஆக இருந்த, கயல்விழி சென்னை குழந்தைகள், பெண்களுக்கான குற்றப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார். இப்பதவி வகித்த பழனிக்குமார், மதுரை குற்றப்பிரிவு துணை-கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்.

* மதுரை குற்றப்பிரிவு துணை-கமிஷனராக இருந்த செந்தில்குமார், திருச்சி ரெயில்வே எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய சரோஜ்குமார் தாகூர், சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

திருச்சி

* திருச்சி சிறப்பு பட்டாலியன் பிரிவு கமாண்டன்ட் உமையாள், சென்னை ஆயுதப்படை சிறப்பு கமாண்டன்ட் ஆக மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த அய்யம்பெருமாள், மணிமுத்தாறு சிறப்பு பட்டாலியன் பிரிவு கமாண்டன்ட் ஆக நியமிக்கப்பட்டார்.

* மணிமுத்தாறு சிறப்பு பட்டாலியன் பிரிவு கமாண்டன்டாக இருந்த ஆனந்தன், திருச்சி சிறப்பு பட்டாலியன் பிரிவு கமாண்டன்ட் ஆக மாற்றப்பட்டார். அதேபோன்று, மாமல்லபுரம் உதவி எஸ்.பி. பத்ரி நாராயணன் பதவி உயர்வு பெற்று, திருப்பூர் துணை-கமிஷனராக மாற்றப்பட்டார். திருப்பூர் துணை-கமிஷனராக இருந்த உமா, கோவை போக்குவரத்து துணை-கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். கோவை குற்றப்பிரிவு துணை-கமிஷனர் பெருமாள், விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டார். விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ராஜராஜன், மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளனர்.

நெல்லை

* நெல்லை மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்த அருண் சக்திகுமார், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக இருந்த செல்வராஜ், தமிழ்நாடு போலீஸ் அகாடமி (நிர்வாகம்) எஸ்.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.

* தமிழ்நாடு போலீஸ் அகாடமி (நிர்வாகம்) எஸ்.பி.யாக இருந்த சாந்தி, சென்னை உணவுபொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.

* சென்னை உணவுபொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த வருண்குமார், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றிய ஓம்பிரகாஷ் மீனா, நெல்லை மாவட்ட எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

* பயிற்சியை முடித்துவிட்டு கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த உதவி எஸ்.பி.க்கள் சுந்தரவதனம் மாமல்லபுரம் உதவி எஸ்.பி.யாகவும், கார்த்திகேயன் ஸ்ரீபெரும்புதூர் எஸ்.பி.யாகவும், பிரதீப் சேரன்மாதேவி உதவி எஸ்.பி.யாகவும், விஸ்வேஸ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி குளச்சல் உதவி எஸ்.பி.யாகவும் பொறுப்பு ஏற்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story