திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் -மு.க. ஸ்டாலின்


திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் -மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 4 Nov 2019 8:29 AM GMT (Updated: 4 Nov 2019 8:29 AM GMT)

திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தஞ்சை,

தஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

தஞ்சையில் வல்லம் நகரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பிள்ளையார்பட்டி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 3 அடி உயரத்தில், கையில் எழுதுகோல் மற்றும் ஓலையுடன் திருவள்ளுவர் அமர்ந்திருக்கும் சிலை ஒன்று உள்ளது.  உலக பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்ட சிலை மீது சில மர்ம நபர்கள் சாணம் வீசி சென்றுள்ளனர். இதில் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் சாணம் வீசப்பட்டு சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.  பிரதமர் மோடி தாய்லாந்து நாட்டில் மேற்கொண்டு வரும் 3 நாள் சுற்றுப்பயணத்தில், திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழை பெருமைப்படுத்தும் வகையில் இந்தியர்கள் மத்தியில் பேசிய நிலையில், திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது தஞ்சாவூர் பகுதியில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  இந்நிலையில், தஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு உரிய மரியாதை செலுத்தப்பட்டு உள்ளது.

திருவள்ளுவர் சிலை அவமதிப்புக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.  இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Next Story