மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; 11-ந்தேதி நடக்கிறது


மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; 11-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 6 Nov 2019 11:30 PM GMT (Updated: 6 Nov 2019 11:30 PM GMT)

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 11-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.

சென்னை, 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கோர்ட்டு வழக்கு காரணமாக இந்த தேர்தல் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க. தங்களது கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நேற்று ஆலோசனை செய்தது.

தே.மு.தி.க. சார்பில் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விஜயகாந்த் தலைமையில் ஆலோசிக்கப்படுகிறது.

இந்தநிலையில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. வரும் 11-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் ஏற்கனவே நடந்து முடிந்த தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட கட்சி நலன் சார்ந்த முடிவுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 11-11-2019 (திங்கட்கிழமை) காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டத்தில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story