திமுக பொதுக்குழு கூட்டம்- மு.க.ஸ்டாலின் பேச்சு


திமுக பொதுக்குழு கூட்டம்- மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 10 Nov 2019 6:43 AM GMT (Updated: 10 Nov 2019 6:43 AM GMT)

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி பொதுக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிய போது, “மாநில அரசின் சில அதிகாரங்களை மத்திய அரசு தன் கைவசம் வைத்துள்ளது. கூட்டாட்சி அமைப்பு முறையை தான் திமுக வலியுறுத்தி வருகிறது. 

மாநில சுயாட்சி தொடர்பாக ராசமன்னார் குழு பரிந்துரையை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு சட்ட முகப்பில் உள்ள அடிப்படை பண்புகளை சிதைக்க திமுக என்றைக்கும் ஒப்புக்கொள்ளாது.

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை இந்தியாவில் பின்பற்ற வேண்டும். தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ அதிகாரம் வேண்டும்.

மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 27%ல் இருந்து 50% ஆக அதிகரிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்” என்றார்.

இதனை தொடர்ந்து திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இணையதளம் மூலம் திமுக உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் கட்சி விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி தேடித்தந்த மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தும் கருணாநிதிக்கு சிறப்பான அருங்காட்சியகம் அமைக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க அங்கீகாரம் வழங்கப்படுகிறது. திமுக அமைப்புத் தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொள்ளாச்சி வழக்கில் குண்டர் சட்டத்தில் ரத்து செய்யப்பட்டதற்கும், கோடநாடு வழக்கு, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, 8 வழிச்சாலை, சேலம் இரும்பாலை உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story