மு.க.ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளருக்கான கூடுதல் அதிகாரம் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வழங்கப்பட்டது


மு.க.ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளருக்கான கூடுதல் அதிகாரம் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 11 Nov 2019 12:00 AM GMT (Updated: 10 Nov 2019 9:09 PM GMT)

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளருக்கான கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது.

சென்னை,

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பொதுக்குழுவுக்கு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி., துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, ஆ.ராசா, எஸ்.ஜெகத்ரட்சகன் உள்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள், பொதுக்குழு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சி பணிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் களப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் சிலர் சில பிரச்சினைகளை முன்வைத்தனர். கோஷ்டி பூசல், உள்கட்சி பிரச்சினை தொடர்பான புகார்களை கூறினர்.

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் முதுமை காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்துவருகிறார். ஆனாலும் அவர் பெயரில்தான் கட்சியின் முக் கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என தி.மு.க. முடிவு செய்தது.

அதன்படி, தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு பொதுச்செயலாளருக்கான அதிகாரம் கூடுதலாக வழங்கப்பட்டது. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்மூலம் இனி மு.க.ஸ்டாலினுக்கு கட்சிரீதியான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கான முழுமையான அதிகாரம் வழங்கப்படுகிறது. அதேநேரம் தி.மு.க. பொதுச்செயலாளராக க.அன்பழகன் தொடர்ந்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

பொதுக்குழுவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் தி.மு.க. இன்றைக்கு ஓங்கி உயர்ந்து நிற்கிறது. 89 எம்.எல்.ஏ.க்களை பெற்றிருந்தோம். இப்போது 100 எம்.எல்.ஏ.க்களை பெற்றிருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் கடந்த ஆண்டு ஒரு இடம்கூட நாம் பெறவில்லை. ஆனால் இன்று நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக தி.மு.க. உட்கார்ந்திருக்கிறது.

கட்சி நலனுக்காக நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று சொன்னேன். இங்கே கூறப்பட்ட சில உண்மையான விமர்சனங்களை, சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் திருத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.

தலைமைக் கழக நிர்வாகிகளாக இருந்தாலும், மாவட்ட செயலாளர்களாக இருந்தாலும், மற்ற நிர்வாகிகளாக இருந்தாலும் ‘யாரும் தங்களை கட்டுப்படுத்த முடியாது’ என்று நினைத்துவிடக் கூடாது. தொண்டர்களால் தான் நானும், நீங்களும் பதவியில் இருக்கிறோம் என்பதை மறக்காமல் இருந்தால் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு எந்தக் கொம்பனாலும் எந்தக் காலத்திலும் முடியாது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் நாம் தோல்வி அடைந்துள்ளோம். அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடாவால் தோற்றோம் என்பது உண்மைதான். ஆனால் அதுமட்டும் காரணமில்லை. நமது பணியில் ஏதோ குறைபாடு இருக்கிறது. அதுவும் தோல்விக்கு ஒரு காரணம். ஆகவே கட்சியின் அடிக்கட்டுமானத்தை பலப்படுத்த வேண்டும்.

நிச்சயம் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். அந்த வெற்றிக்காக நாம் கடுமையாக, உண்மையாக உழைக்க வேண்டும். நமது வெற்றியைத் தடுப்பதற்கு மாநில அரசு மட்டுமல்ல, மத்திய அரசும் சதித்திட்டங்களைத் தீட்டிவருகிறது.

நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், அடுத்து நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி ஆளும் கட்சியின் பணபலத்தை வெல்லும் வல்லமை உங்களது ஒற்றுமைக்கும், உழைப்புக்கும் உண்டு.

தமிழகத்தில் மோசமான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. ஒரு கொள்ளைக் கும்பலிடம் தமிழ்நாட்டு அரசாங்கம் சிக்கிவிட்டது. தமிழகம் பல கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

‘மிசா’விலேயே நான் இல்லையாம். நான் ‘மிசா’வில்தான் கைது செய்யப்பட்டேன் என்று நானே சொல்லிக்கொள்ள சற்று நாணுகிறேன். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்று திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறார் டாக்டர் ராமதாஸ். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் புகார் அளித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி புகாரில் உண்மை இருந்தால் விசாரிக்கப்படும் என்றார்.

பஞ்சமி நிலம் என்று அவர் கள் கண்டுபிடித்தால், அவர்கள் வெளியிடமாட்டார்களா? தெரிந்துகொண்டே, வேண்டுமென்றே நாடகம் நடத்துகிறார்கள்.

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முரசொலி அலுவலகத்தைப் பூட்டவேண்டும் என்று கூறுகிறார். நாங்கள் ஒன்றும் கையாலாகாதவர்கள் அல்ல. இனி வரப்போகும் காலம் நமக்கு சவாலான காலமாகத்தான் இருக்கப்போகிறது. எந்தச் சவாலையும் சந்திப்போம். இந்த பொதுக்குழுவில் நாம் எடுக்கவேண்டிய உறுதி, கோட்டையைவிட்டு கொள்ளைக் கூட்டத்தை விரட்டிடுவோம் என்பதுதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story