அரசியல் தெரியுமா? ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு


அரசியல் தெரியுமா? ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
x
தினத்தந்தி 13 Nov 2019 12:00 AM GMT (Updated: 12 Nov 2019 7:48 PM GMT)

அரசியல் தெரியுமா? என்று ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

சேலம், 

அரசியல் தெரியுமா? என்று ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

பருவநிலை மாற்றம்

கேள்வி:- சென்னையில் காற்று மாசு அதிகமாக இருப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

பதில்:- ஏற்கனவே வருவாய்த்துறை அமைச்சர் தகுந்த விளக்கத்தை கொடுத்திருக்கிறார். எந்தெந்த வகையில் மாசு ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். ‘புல்புல்’ புயலால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக மாசு ஏற்பட்டுள்ளது. தற்போது நாம் இருக்கக்கூடிய இந்த இடத்தில் மாசு ஏதும் தென்படவில்லையே?.

கேள்வி:- பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது போல், காலை உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஏதும் உள்ளதா?

பதில்:- தற்போது வரை அப்படிப்பட்ட திட்டம் ஏதும் அரசிடம் இல்லை. நிதிநிலை திருப்தி அடைந்தவுடன் இதுகுறித்து அரசு பரிசீலிக்கும்.

ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

கேள்வி:- நெடுஞ்சாலைத்துறைக்கு வழங்கிய ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு திரும்ப பெற்றதாக மறுபடியும் ஒரு குற்றச்சாட்டு வெளியாகி வருகிறதே?

பதில்:- சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக அமைப்பதற்கு நிலம் எடுத்தோம். நிலம் கொடுக்கக்கூடாது என்று சொன்னீர்கள். இது எல்லா இடங்களுக்கும் தொற்றுநோய் போல் பரவி தமிழகத்தில் எங்கேயும் நிலம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மின்கோபுரம் கொண்டுபோவதற்கும், சாலையை விரிவுபடுத்துவதற்கும் நிலம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். இதனால் அரசாங்கம் என்ன செய்ய முடியும்?.

விலைமதிக்க முடியாத உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் சாலைகளை விரிவுபடுத்துகிறோம். குறிப்பிட்ட காலத்திற்குள் நாம் நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசுக்கு கொடுத்தால் தான் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஆனால், நிலத்தை கையகப்படுத்தும் போது பலர் கோர்ட்டுக்கு சென்றுவிடுகிறார்கள். சிலர் போராட்டம் நடத்துகிறார்கள். இதற்கு சில அரசியல் கட்சிகள் துணை நிற்கின்றன. இவ்வாறு இருக்க எப்படி நாங்கள் விரிவாக்கம் செய்ய முடியும்?. பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் திட்டங் களை நிறைவேற்ற முடியும்.

தடையில்லா மின்சாரம்

அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் தான் சாலை விரிவாக்கப்பணி நடைபெறும். அதேபோல மின்கோபுரமும் கொண்டுவர முடியும். தடையில்லா மின்சாரம் வேண்டும் என்கிறோம். நாளுக்கு நாள் மின்சார தேவை அதிகரிப்பதால், அதற்கேற்றவாறு மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்றால், மின்பாதை அமைக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்க இயலும்.

இன்னும் 10 ஆண்டுகள் கழித்து என்ன நடக்கும் என்று திட்டமிட்டு நாங்கள் செயல்படுத்துகிறோம். 8 வழிச்சாலை முழுவதுமாக நிறைவேறுவதற்கு சுமார் 5 ஆண்டு காலம் ஆகும். இப்படி எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் அரசாங்கத்தால் எப்படி திட்டங்களை செயல்படுத்த முடியும்? 2001-2002-ல் தோராயமாக 100 லட்சம் வாகனங்கள் இருந்தன. இப்போது 300 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதனால், விபத்துகள் அதிகரிக்கிறது.

சாலை விரிவாக்கம்

விபத்துகளை குறைக்கவே நவீன முறையில் உலக தரத்திற்கு ஏற்ற சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறோம். ஆனால் சில காலகட்டத்தில் இதற்கு தடை வருகிறது. இதனால் நாம் கொண்டு வரும் திட்டங்கள் பாழாகிறது, வீணாகிறது. இன்றைக்கு தமிழகத்தில் 14 சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நாம் வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, அதற்கு அனுமதி கொடுத்தது.

முதற்கட்டமாக 4 சாலைகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து, அதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டோம். ஒரு சில இடங்களில் நிலம் எடுத்தோம், பெரும்பாலான இடங்களில் எடுக்க முடியவில்லை. நான் டெல்லிக்கு சென்று பிரதமரையும், மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரியையும் சந்தித்து கோரிக்கை வைத்து துரிதமாக நிலம் எடுக் கின்ற பணிகளை மேற்கொண்டு பொதுமக்கள் ஆதரவோடு நிலங்களை கையகப்படுத்தி மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைத்து, பின்னர் அவர்கள் அங்கே பணி செய்வதற்கு அரசு துணை நிற்கும்.

வயதாகி விட்டது

கேள்வி:- ரஜினியை போன்றே கமல்ஹாசனும் அ.தி.மு.க., தி.மு.க. பற்றி விமர்சனம் செய்துள்ளாரே?

பதில்:- வெற்றிடம் என்று சொன்னவர் ஏன் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை. கமல் மிகப்பெரிய தலைவர் தானே? நாடாளுமன்ற தேர்தலில் எவ்வளவு ஓட்டுகள் பெற்றார்?. இவையெல்லாம் வேண்டும் என்றே திட்டமிட்டு 65, 66 வயது ஆகிவிட்ட காரணத்தால் திரைப்பட துறையில் தகுந்த வாய்ப்பு இல்லாத காரணத்தால் கட்சி ஆரம்பிக்கிறார்கள்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம் பிக்கலாம், அதில் தவறில்லை. ஆனால் மற்றவர்களை குறை சொல்லி பேசுவது தவறாக உள்ளது. இத்தனை காலமாக அவர் எங்கிருந்தார்?. நான் 1974-ல் இருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்து பாடுபட்டு உழைத்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். எடுத்தவுடன் நாங்கள் இந்த நிலைக்கு வரவில்லை. ஏறக்குறைய 45 ஆண்டு காலம் கட்சியில் பணியாற்றி இருக்கிறோம். மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறோம். பல்வேறு பணிகளை மக்களுக்கு செய்து ஆதரவை பெற்று இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறோம்.

என்ன செய்தார்கள்?

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் மக்களுக்காக என்ன செய்தார்கள்?. திரைப்படங்களில் நடித்தார்கள், வருமானத்தை ஈட்டிக்கொண்டார்கள். இன்று வரை திரைப்படங்களில் நடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். இன்று வரை வருமானத்தை உருவாக்கி கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மக்களிடத்தில் மிகப்பெரிய செல்வாக்கு இருப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள்.

இவர்களை விட மிகப்பெரிய நடிகர் சிவாஜி கணேசனே தேர்தலை சந்தித்து அவருக்கு எப்படிப்பட்ட நிலை ஏற்பட்டது என்று உங்களுக்கே நன்றாக தெரியும். அவரை விட மிகச்சிறந்த நடிகர் இல்லை. எம்.ஜி.ஆருக்கு அடுத்த நிலையில் நடிகர் திலகம் இருந்தார். அவரெல்லாம் கட்சி தொடங்கி ஏற்பட்ட நிலைமை தான் இவருக்கும் ஏற்படும். வயது முதிர்ந்த காரணத்தினாலே கமல்ஹாசன் அவராகவே இப்படி ஒரு முன்னேற்பாட்டை செய்து கொண்டார்.

அரசியல் தெரியுமா?

அவருடைய கட்சியை சேர்ந்தவர்கள் தனது திரைப்படத்தை பார்த்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்று கருதுகிறேன். அந்த நிலைக்கு சென்று விட்டார். அதனால் தான் கட்சி ஆரம்பித்துள்ளார். அவருக்கு அரசியலில் என்ன தெரியும்? எத்தனை உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளது என்று தெரியுமா?, அந்த பகுதி மக்களின் பிரச்சினை தெரியுமா? என்ன அடிப்படை தெரியும்? அடிப்படை தெரியாமலே தலைவர் போன்று உருவாக்கிக்கொண்டார்கள். திரைப்படங்களில் நடித்தார்கள், மக்களின் பணத்தையும் பெற்றுக்கொண்டார்கள், அந்த பணத்தின் வாயிலாக இன்றைக்கு அரசியலில் பிரவேசிக்கிறார்கள்.

கேள்வி:- ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் இதுபோல் தான் வருவாரா?

பதில்:- யூகத்தின் அடிப்படை யில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், பின்னர் அதற்குண்டான பதில் தரப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story