தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2081 கோடி வாடகை பாக்கியை குறைக்க 'பேரம்' நடப்பதாக செய்தி -மு.க.ஸ்டாலின்


தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2081 கோடி வாடகை பாக்கியை குறைக்க பேரம் நடப்பதாக செய்தி -மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 13 Nov 2019 3:52 PM GMT (Updated: 13 Nov 2019 3:52 PM GMT)

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 2,081 கோடி ரூபாய் வாடகை பாக்கியை குறைக்க பேரம் நடப்பதாக செய்தி வெளியாகி உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு கடந்த 1935-ம் ஆண்டு சுமார் 15 ஏக்கர் நிலம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டது. குத்தகை காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. கடந்த 1995 ஆம் ஆண்டு புதிய குத்தகை ஒப்பந்தம் தமிழக அரசுடன்  ஏற்படுத்தப்பட்டது. 

அதன்படி 2015 ஆம் ஆண்டு வரை குத்தகை ஒப்பந்தம் ஏற்படுத்துவது என்றும் 2000-ஆவது ஆண்டுவரை மாதம் 50 ஆயிரம் குத்தகையும் 2000 ஆண்டுக்கு பிறகு சந்தை மதிப்பில் குத்தகையை மாற்றி அமைப்பது என இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளபட்டது. இதனிடையே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 2000 கோடி ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கி வைத்துள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியாகி இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் வாடகை பாக்கி தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:- 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2081 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளது என சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியும், அந்தப் பணத்தை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்கும் 'பேரம்' நடப்பதாக செய்தி!

அமைச்சரவை அப்படி முடிவு எடுத்திருந்தால், அதற்கான அரசாணை ஏதும் வெளியிடாமல் நிறுத்த வேண்டும்.

மக்கள் நலத் திட்டங்களுக்கு, நிதி பற்றாக்குறை எனும் நேரத்தில், இதுபோன்ற வாடகை பாக்கியை குறைக்கும் நடவடிக்கை யார் லாபத்திற்காக?

'கமிஷன், கரப்ஷன், கலக்‌ஷன், பேரம்' - இதுதவிர அதிமுக ஆட்சிக்கு வேறேதுமே தெரியாதா? என பதிவிட்டுள்ளார்.

Next Story