300 அடி பள்ளத்தில் வீசி 2 குழந்தைகள் கொலை குடும்பத்தகராறில் தந்தை வெறிச்செயல்


300 அடி பள்ளத்தில் வீசி 2 குழந்தைகள் கொலை குடும்பத்தகராறில் தந்தை வெறிச்செயல்
x
தினத்தந்தி 13 Nov 2019 10:00 PM GMT (Updated: 13 Nov 2019 8:16 PM GMT)

கொல்லிமலையில் குடும்ப தகராறில் 300 அடி பள்ளத்தில் 2 குழந்தைகளை வீசி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டூர்நாடு அரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 28). இவரது மனைவி பாக்கியம் (24). இவர்களுக்கு கிரிதாஸ் (8) என்ற மகனும், கவிதர்ஷினி (5) என்ற மகளும் இருந்தனர். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இதில் மனமுடைந்த பாக்கியம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து அரியூர்நாடு கவரப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு 2 குழந்தைகளுடன் சென்றார்.

பின்னர் குழந்தைகள் இருவரும் கவரப்பட்டி அருகே தெம்பளம் ஊராட்சியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி கவரப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற சிரஞ்சீவி, அவர்களிடம் சமாதானம் பேசி குழந்தைகளை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார். மேலும், மனைவி பாக்கியத்தையும் சமாதானம் செய்து அனுப்பும் படியும் கூறி உள்ளார். இதையடுத்து குழந்தைகள் 2 பேரையும் சிரஞ்சீவியுடன் பாக்கியத்தின் பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

2 குழந்தைகள் கொலை

இதன்பின்னர் குழந்தைகளை சிரஞ்சீவி பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து உள்ளார். இதுபற்றி கேட்டறிய சிரஞ்சீவியை தொடர்பு கொண்டபோதும் அவருடன் பேச முடியவில்லை. இதில் சந்தேகமடைந்த பாக்கியம், இது குறித்து கொல்லிமலை வாழவந்திநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சிரஞ்சீவியை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த 8-ந் தேதி கொல்லிமலை செம்மேடு அருகே சீக்குப்பாறை என்னும் இடத்தில் உள்ள வியூ பாயிண்டில் இருந்து 2 குழந்தைகளையும் வீசியெறிந்து கொலை செய்ததாக அவர் தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் கொல்லிமலை தீயணைப்பு துறையினர் சீக்குப்பாறை அருகே உள்ள பள்ளத்தில் இறங்கி தேடியபோது சுமார் 300 அடி பள்ளத்தில் கிரிதாஸ், கவிதர்ஷினி ஆகிய இருவரும் இறந்து கிடந்தனர். அழுகிய நிலையில் கிடந்த இருவரது உடல்களையும் தீயணைப்பு துறையினர் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

தந்தை கைது

இதைத்தொடர்ந்து 2 குழந்தைகளையும் பள்ளத்தில் வீசி கொலை செய்த சிரஞ்சீவியை வாழவந்திநாடு போலீசார் கைது செய்தனர்.

Next Story