அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததால் விபத்தில் சிக்கிய கோவை பெண்ணின் கால் அகற்றம் தொடர்ந்து தீவிர சிகிச்சை


அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததால் விபத்தில் சிக்கிய கோவை பெண்ணின் கால் அகற்றம் தொடர்ந்து தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 15 Nov 2019 10:15 PM GMT (Updated: 15 Nov 2019 8:37 PM GMT)

அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததால் லாரி மோதி படுகாயம் அடைந்த கோவையை சேர்ந்த ராஜேஸ்வரியின் கால் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது.

கோவை,

அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததால் லாரி மோதி படுகாயம் அடைந்த கோவையை சேர்ந்த ராஜேஸ்வரியின் கால் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொடி கம்பம் சாய்ந்தது

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த நாகநாதன் என்பவருடைய மகள் ராஜேஸ்வரி(வயது31). இவர் கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கணக்காளராக வேலை செய்து வந்தார்.

கடந்த 11-ந்தேதி காலை ஸ்கூட்டரில் வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டார். கோவை பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியில் சாலை தடுப்பு பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதில் ஒரு கொடிக்கம்பம் திடீரென்று சாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ராஜேஸ்வரி தன்மீது கொடிக்கம்பம் விழாமல் தவிர்ப்பதற்காக திடீர் பிரேக் போட்டுள்ளார். இதனால் நிலை தடுமாறிய அவர் ஸ்கூட்டருடன் சறுக்கி கீழே விழுந்துள்ளார்.

கால்கள் நசுங்கி படுகாயம்

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ராஜேஸ்வரியின் கால்கள் மீது ஏறியது. அவரது இரண்டு கால்களும் லாரி சக்கரத்தில் சிக்கியதால் கால்கள் நசுங்கி படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த லாரி வலதுபுறம் ஏறி நின்றது. ராஜேஸ்வரியின் ஸ்கூட்டர் லாரி சக்கரத்துக்குள் மாட்டிக்கொண்டது.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த விஜயானந்த்(30) என்பவரும் லாரியில் மோதி காயம் அடைந்தார்.

மருத்துவமனையில் தீவிர சிகி்ச்சை

கால்கள் முறிந்து படுகாயம் அடைந்த ராஜேஸ்வரிக்கு கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இடதுகாலின் மூட்டு பகுதி சிதைந்தநிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் ராஜேஸ்வரியின் இடதுகாலை காப்பாற்ற முடியாமல் அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த மருத்துவமனையின் டாக்டர்கள் கூறியதாவது:-

இடதுகால் அகற்றம்

இரண்டு கால்களையும் காப்பாற்ற தீவிர சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் இடது காலில் தசைகள் சிதைந்து, எலும்புகள் முறிந்து இருந்தது. இளம்பெண்ணின் உயிரை காப்பாற்ற வேண்டிய நிலையில், இடது காலின் தொடை பகுதியில் இருந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஆபரேஷன் செய்து இடதுகால் அகற்றப்பட்டுள்ளது. செயற்கை கால் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வலதுகாலின் எலும்புகள் முறிந்து இருந்தாலும் அந்த காலை காப்பாற்றி விடுவோம். இளம்பெண் ராஜேஸ்வரி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள்.

பெற்றோர் சோகம்

மகளின் இடதுகால் அகற்றப்பட்டுள்ளதால் தந்தை நாகநாதன், தாய் சித்ரா மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.

தொடர்ந்து மருத்துவமனையில் லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினர் நிவாரண நிதி உதவியை எதிர்நோக்கியுள்ளனர்.

Next Story