போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ் வங்கி அதிகாரிகள் 2 பேர் கைவரிசை


போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ் வங்கி அதிகாரிகள் 2 பேர் கைவரிசை
x
தினத்தந்தி 15 Nov 2019 10:15 PM GMT (Updated: 15 Nov 2019 8:42 PM GMT)

போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி, இறந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.25 லட்சத்தை அபேஸ் செய்த வங்கி அதிகாரிகள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி, 

போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி, இறந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.25 லட்சத்தை அபேஸ் செய்த வங்கி அதிகாரிகள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாடிக்கையாளர் மரணம்

திருச்சியை சேர்ந்தவர் எமிலிசோலா. இவர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி ஜமால் முகமது கல்லூரி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். எமிலிசோலா தனது வங்கி கணக்கில் ரூ.30 லட்சத்திற்கும் மேல் பணம் டெபாசிட் செய்து இருந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எமிலிசோலா மரணம் அடைந்து விட்டார். அவரது வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்து உறவினர்களுக்கு எதுவும் தெரியவில்லை.

அந்த வங்கியின் மேலாளராக, திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள நாச்சிக்குறிச்சி நாகப்பாநகரை சேர்ந்த ஷேக் மொய்தீன் (வயது 58) பணியாற்றினார். அதே வங்கியில் உதவி மேலாளராக சின்னத்துரை பணியாற்றினார். தங்களது வங்கியின் வாடிக்கையாளரான எமிலிசோலா மரணம் அடைந்த பின்னர், அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்திற்கு சொந்தம் கொண்டாட யாரும் வரவில்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.

போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பு

இதையடுத்து, எமிலிசோலாவின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை, வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் கையாடல் செய்ய திட்டமிட்டனர். அதற்காக முதலில் அவரது பெயரிலான வங்கி கணக்கை மீண்டும் புதுப்பித்தனர். பின்னர் எமிலிசோலா பெயரில் போலியாக கையெழுத்திட்டு விண்ணப்பித்ததுபோல ஏ.டி.எம். கார்டு ஒன்றை அதிகாரிகள் இருவரும் உருவாக்கினார்கள்.

வங்கிக்கு நேரடியாக வந்தால் பணத்தை எடுக்க முடியாது என்பதால், போலியாக ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

ரூ.25 லட்சம் அபேஸ்

அதன்பின்னர் அதிகாரிகள் இருவரும் கூட்டு சேர்ந்து கடந்த 6 மாதங்களாக ஏ.டி.எம். கார்டை பயன் படுத்தி, மரணம் அடைந்த எமிலிசோலா சேமிப்பு கணக்கில் இருந்து பல்வேறு கட்டமாக ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 50-ஐ கையாடல் செய்தனர். இந்த நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகத்தில் இருந்து, வங்கியின் கிளை அலுவலகங்களில் உள்ள டெபாசிட் தொகை குறித்து தணிக்கை செய்யப்பட்டது. அப்போது, ஜமால் முகமது கல்லூரி கிளை வங்கியில் இருந்து, வாடிக்கையாளர் எமிலிசோலா தொடர்ந்து 2 ஆண்டுக்கும் மேலாக பணம் டெபாசிட் செய்யாததும், அதேவேளையில் பணம் மட்டும் வங்கிக்கு நேரடியாக வராமல் ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், வாடிக்கையாளர் எமிலிசோலா மரணம் அடைந்ததும், அதன் பின்னர் அவரது வங்கி கணக்கை வங்கியின் மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் புதுப்பித்ததும் உறுதியானது. மேலும் எமிலிசோலா பெயரில் ஏ.டி.எம் கார்டு உருவாக்கி, அதன் மூலம் ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 50-ஐ கையாடல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தணிக்கை செய்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிகாரிகள் பணியிடை நீக்கம்

தணிக்கை செய்த அதிகாரிகளின் முழுமையான விசாரணைக்கு பின்னர் வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து, கையாடல் செய்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும் வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை, திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல முதுநிலை மேலாளர் பிரேம் குமார் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

அந்த புகார் மனுமீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

2 பேர் மீது வழக்கு

அதன்பேரில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் மீது கூட்டு சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story