முறையாக வாதிடாததால் தோல்வி: பெண்ணையாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு தமிழக அரசுக்கு துரைமுருகன் வலியுறுத்தல்


முறையாக வாதிடாததால் தோல்வி: பெண்ணையாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு தமிழக அரசுக்கு துரைமுருகன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Nov 2019 11:15 PM GMT (Updated: 15 Nov 2019 9:04 PM GMT)

பெண்ணையாறு வழக்கில் முறையாக வாதிடாததால் தோல்வி ஏற்பட்டதாகவும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

பெண்ணையாறு வழக்கில் முறையாக வாதிடாததால் தோல்வி ஏற்பட்டதாகவும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முறையாக வாதிடவில்லை

பெண்ணையாற்றின் குறுக்கே 5 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் தமிழகத்தில் தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிந்தும், சுப்ரீம் கோர்ட்டில் முறையாக வாதிடாமல் அ.தி.மு.க. அரசு தோற்று இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக நலன் சார்ந்த எந்தப் பிரச்சினையிலும், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் ஆகும் எந்த வழக்குகளிலும் தமிழக அரசோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களோ எந்த கவனமும் செலுத்துவதில்லை.

தொடர்புடைய வக்கீல் களை சந்தித்து அவர்களுடன் வழக்கு தொடர்பாக விவாதிப்பதும் இல்லை. கலந்து பேசுவதும் இல்லை.

ஜீவாதார உரிமை இழப்பு

இதன் விளைவாக தமிழகம் தனது ஜீவாதார உரிமைகளை பல வழிகளில் இழந்திருக்கிறது. தமிழக மக்களின் உயிர்நாடி பிரச்சினையான நதிநீர் தொடர்பான வழக்குகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டாமல் இருப்பதும், குறைந்தபட்சம் அந்த துறை அமைச்சர் என்ற அடிப்படையில் வழக்குகளில் கவனம் செலுத்தாமல் இருப்பதும் தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கி வருகிறது.

ஆகவே உடனடியாக முதல்-அமைச்சரே, நேரடியாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு, சுப்ரீம் கோர்ட்டிலேயே மேல்முறையீடு செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, தமிழகத்தின் நதிநீர் உரிமையை நிலைநாட்டி, 5 மாவட்ட மக்களுக்கான பாதிப்பை நீக்கவும், கர்நாடக பாசன திட்டங்களை தடுத்து நிறுத்திடவும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story