5 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்திற்கு விற்பனை தாய் பரபரப்பு புகார்


5 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்திற்கு விற்பனை தாய் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 18 Nov 2019 11:15 PM GMT (Updated: 18 Nov 2019 11:15 PM GMT)

5 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக குழந்தையின் தாய், கலெக்டரிடம் பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில், ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள நைனாம்பட்டியை சேர்ந்த மீனா தனது கணவர் ராஜாவுடன் வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த மனு குறித்து மீனா கூறியதாவது:-

ஆண் குழந்தை விற்பனை

நானும் எனது உறவினரான ராஜாவும் பெற்றோர் எதிர்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் திருப்பூரில் தங்கியிருந்து அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தோம். கடந்த ஜூன் மாதம் எனக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தேன்.

இதுகுறித்து சேலத்தில் உள்ள எனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சேலத்திற்கு என்னை அழைத்து வந்து 3 ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். அப்போது எனது 5 மாத குழந்தை மற்றும் கணவர் ஆகிய இருவரும் இறந்து விட்டதாக என்னிடம் தெரிவித்தனர். மேலும் என்னை 2 மாதங்களாக வீட்டின் உள்ளேயே பூட்டி வைத்திருந்தனர். இதனிடையே எனது குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு பெற்றோர் விற்று விட்டதை அறிந்தேன். இந்தநிலையில் அவர்களிடம் இருந்து தப்பித்து கடந்த ஒரு மாதத்திற்கு பின்பு திருப்பூரில் உள்ள கணவரை சந்தித்து விவரத்தை தெரிவித்தேன்.

மீட்டு தர கோரிக்கை

எனது குழந்தையை விற்றது பற்றி ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எனது குழந்தையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் 2 பேரின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த புகாரால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story