ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும்: சீமான் பதிலடி


ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும்: சீமான் பதிலடி
x
தினத்தந்தி 21 Nov 2019 4:05 PM GMT (Updated: 21 Nov 2019 4:05 PM GMT)

ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசியலில், 2021 ஆம் ஆண்டு அற்புதம், அதிசயம்  நிகழும் என்று பேசிய ரஜினிகாந்த்,  தேவையேற்பட்டால் தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணைவோம்  எனக்கூறியது தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. ரஜினியின் கருத்துக்கு ஆளுங்கட்சியான அதிமுக, கடும் எதிர்வினைகளை ஆற்றியதோடு, 2021 ஆம் ஆண்டிலும் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்பதுதான், ரஜினி குறிப்பிட்ட அதிசயம் என்று கூறியது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியின் கருத்துக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “  ஆம்! அதிசயம் நிகழும். 'தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்' என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021-ல் நடக்கும், நடந்தே தீரும்” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும், சமூக வலைத்தளங்களிலும் அனல் பறக்கும் கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

Next Story