தமிழகத்தில் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு


தமிழகத்தில் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Nov 2019 12:15 AM GMT (Updated: 22 Nov 2019 11:20 PM GMT)

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்குவது தொடர்பாக கடந்த ஆகஸ்டு 30-ந் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களிலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்டு மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்த அரசாணையை எதிர்த்து சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருக் கும் ஏழைகளின் நலன் கருதி பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்டு 30-ந் தேதி தமிழக வருவாய் துறை செயலாளர் அரசாணை வெளியிட்டு உள்ளார். அரசு புறம்போக்கு நிலத்தை பொறுத்தவரை எந்த ஒரு ஆட்சேபனையும் எனக்கு இல்லை.

அதிகாரம் இல்லை

அதேநேரம் அந்த அரசாணையில் 4-வது பத்தியில் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கும் இதுபோல் இலவச பட்டா வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு கோவில் நிலத்தை ஏழைகளுக்கு வழங்க தமிழக வருவாய் துறைக்கு அதிகாரம் இல்லை. ஏனென்றால், கோவில் சொத்துகளை பராமரிக்கும் அதிகாரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு மட்டுமே உள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

ஏழைகளுக்கு வீட்டு மனை

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது, இந்த அரசாணை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக் கும் விதமாக உள்ளது என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளடர் வி.ஜெயபிரகாஷ் நாராயணன் வாதாடுகையில், ‘ஏழைகளுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அரசாணையை அரசு பிறப்பித்து இருப்பதாகவும், ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், கோவில் நிலத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த பட்டா வழங்கப்படும் என்றும், அனைவருக்கும் பட்டா வழங் கப்படாது என்றும் கூறினார்.

கோவில் சொத்துகள் என்றாலும், அதற்குரிய தொகையை கொடுத்துத்தான் வருவாய் துறை நிலத்தை வாங்கி ஏழைகளுக்கு வழங்கும்” என்றும் அவர் தனது வாதத்தின் போது தெரிவித்தார்.

நீதிபதிகள் உத்தரவு

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த பிரதான வழக்கின் விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

அதேநேரம், இந்த அரசாணைக்கு தடை கேட்ட இடைக் கால மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 18-ந் தேதி உத்தரவிட்டனர்.

அந்த இடைக்கால மனு மீதான உத்தரவை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் நேற்று வழங்கினார்கள்.

அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறி இருப்பதாவது:-

அரசாணைக்கு தடை

கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் வரன்முறை செய்தாலோ அல்லது அந்த ஆக்கிரமிப்புகளை எல்லாம் புனிதப்படுத்தினாலோ அது கண்டிப்பாக கோவில் சொத்துகளை எல்லாம் சுத்தமாக இல்லாமல் ஆக்கிவிடும். கோவிலுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் அரசின் இந்த செயல், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்துக்கு எதிரானது.

எனவே, கோவில் நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு தடை விதிக்க முகாந்திரம் உள்ளது. அதனால், இந்த அரசாணைக்கு தடை விதிக்கிறோம்.

நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

கோவில் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தாமலும், அந்த சொத்தை பழைய நிலைக்கு கொண்டு வராமலும் இருந்த அதிகாரிகள் மீது இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை ஏதாவது எடுக்கப்பட்டதா? என்பது குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

Next Story