திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு அமைச்சர் உதயகுமார் தகவல்


திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு அமைச்சர் உதயகுமார் தகவல்
x
தினத்தந்தி 23 Nov 2019 10:30 PM GMT (Updated: 23 Nov 2019 9:19 PM GMT)

திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 2 புதிய மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் ரூ.600 கோடியை ஒதுக்கி உள்ளார் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறினார்.

திருப்பத்தூர்,

வேலூர் மாவட்டத்தை பிரித்து புதிதாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 மாவட்டத்தையும் 28-ந் தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழா தொன்போஸ்கோ பள்ளியில் நடக்கிறது. அங்கு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இந்த நிலையில் தொடக்க விழா நடைபெறும் தொன் போஸ்கோ பள்ளி மைதானத்தை அமைச்சர்கள் உதயகுமார், கே.சி.வீரமணி, நிலோபர் கபில் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

ஆலோசனை கூட்டம்

அதனை தொடர்ந்து விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். இந்த மாவட்டங்களை அவரே நேரில் வந்து தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதற்கான ஏற்பாடுகளை அனைத்துத் துறையினரும் சிறப்பாக செய்ய வேண்டும்.முதியோர் உதவித்தொகை 5 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 32 மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக வேலூர் மாவட்டத்தை உருவாக்கி காட்டியவர் அமைச்சர் கே.சி.வீரமணி ஆவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டி

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தை 28-ந் தேதி காலை 10.30 மணி அளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மாவட்டத்தை பிரிப்பதற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என்று முதல்- அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து துறை அலுவலகத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. கோவில் நிலங்களில் பட்டா வழங்க ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. நீர்நிலை புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என்றும் ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. அதனை கருத்தில் கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story