ஓ.பி.எஸ்-ஐ குறிப்பிடவில்லை, அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்களே? என்ற அர்த்தத்தில் கேட்டேன் -குருமூர்த்தி விளக்கம்


ஓ.பி.எஸ்-ஐ குறிப்பிடவில்லை, அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்களே? என்ற அர்த்தத்தில் கேட்டேன் -குருமூர்த்தி விளக்கம்
x
தினத்தந்தி 25 Nov 2019 5:29 AM GMT (Updated: 25 Nov 2019 5:29 AM GMT)

ஓ.பன்னீர்செல்வத்தை தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. அதிமுகவினர் துணிவில்லாமல் ஏன் சசிகலா காலில் விழுகிறார்கள்? என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன் என்று குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை

திருச்சியில் நேற்று நடந்த துக்ளக் வார இதழின் பொன்விழாக் கூட்டத்தில் பேசிய துக்ளக்கின் ஆசிரியர் குருமூர்த்தி, தான் சொன்னதால் தான் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்ம யுத்தம் நடத்தினார் என்று கூறியிருந்தார்.

மேலும், “சசிகலாவை முதல்வராக்க பணிகள் நடந்தபோது, என்னிடம் வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், நீங்கள் எல்லாம் ஆம்பளையா...? எதுக்கு இருக்கீங்க...? என்று கேட்டேன். நான் கூறியதால் தான் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தியானம் செய்து அதன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது.  அதன் பிறகு பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைத்தேன்” என்று பேசியிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் பற்றி குருமூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. குருமூர்த்தி ஆணவத்தின் உச்சத்தில் பேசியிருப்பதாகவும் அவர் நாவை அடக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறி இருந்தார்.

இந்த நிலையில், நேற்றைய பேச்சு பற்றி குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளர். அதில், 

“ஓ.பி.எஸ் உடன் பேசியபோது அவரைத் தனிப்பட்ட முறையில்  குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள்? என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலாவிடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை உள்ளது.

இதை ஏற்கனவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். திருச்சி துக்ளக்  கூட்டத்தில் அதைக் கூற காரணம், எனக்கு முன் பேசியவர் ஜெயாவை ஆதரித்த துக்ளக் அவரே ஏற்ற சசிகலாவை எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். அவருக்கு பதில் கூறும்போது ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன்.

அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை உள்ளது. எனவே முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்து பரப்புவது  கண்ணியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓ.பன்னீர்செல்வம் மேல்தான் அதிகம்  மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து” என்று ட்வீட் செய்துள்ளார்.


Next Story