கலந்தாய்வு மூலம் சேரும் மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை -தமிழக உயர் கல்வித் துறை


கலந்தாய்வு மூலம் சேரும் மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை -தமிழக உயர் கல்வித் துறை
x
தினத்தந்தி 25 Nov 2019 7:28 AM GMT (Updated: 25 Nov 2019 7:28 AM GMT)

பொறியியல் படிப்பில் கலந்தாய்வு வழியாக சேரும் மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு தமிழக அரசின் சார்பில், பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. தமிழக உயர்கல்வித்துறையின் அனுமதியுடன், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இந்த கலந்தாய்வை நடத்துகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் கலந்தாய்வு வழியாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அது தவிர தனியார் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

அரசு நடத்தும் கலந்தாய்வு வழியாக சேரும் மாணவர்களுக்கு மட்டுமே, பல்வேறு சலுகைகளை அரசு அளித்து வருகிறது. கலந்தாய்வு வழியே சேர்ந்த மாணவர்களிடம், அரசு நிர்ணயித்த அளவின்படியே கல்வி கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா, அனைத்து கல்லுாரிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய அறிவிப்பின்படி தமிழக அரசின் கவுன்சிலிங் வழியே சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, கல்வி உதவித்தொகை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் குறைவாக உள்ளனர். எனவே, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும். அதேநேரம், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, கல்வி உதவித்தொகை பெற முடியாது. எனவே, அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story