வெங்காய விலையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின்


வெங்காய விலையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 27 Nov 2019 4:08 PM GMT (Updated: 27 Nov 2019 4:08 PM GMT)

வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கின்றன.  சிவசேனா தலைவர் மற்றும் மகா விகாஸ் அகாடி தலைவரான உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து அவர் பதவியேற்கும் நிகழ்ச்சி மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நாளை மாலை 6.40 மணிக்கு நடைபெறுகிறது.  இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.  இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடப்பட்டது.

இதேபோன்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில காங்கிரஸ் முதல் மந்திரிகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.  பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, சிவசேனா சார்பில் அழைப்பு விடப்பட்டது.

இந்நிலையில், மராட்டிய முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.  இதற்காக நாளை காலை சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு செல்கிறார்.

வெங்காயத்தின் அவசியத்தை உணர்ந்து, விலையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகமாகிறது!

அரசு வெங்காயத்தின் அவசிய தேவையை உணர்ந்து விலையை கட்டுக்குள் வைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள்! என்று தெரிவித்துள்ளார்.

Next Story