உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்றது ஏன்? தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்


உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்றது ஏன்? தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 30 Nov 2019 10:52 PM GMT (Updated: 30 Nov 2019 10:52 PM GMT)

மராட்டியத்தில் நடந்த உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்றது ஏன்? என்பது குறித்து மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மராட்டியத்தில் தங்களை தவிர யாருமே ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதில் பா.ஜ.க. தனது அதிகாரத்தை கொண்டு அத்துமீறலை தொடங்கியது. ஆனால் மராட்டிய மண்ணில் ஜனநாயகத்தை நிலைநாட்டிடும் நோக்கில் சிவசேனா கட்சிக்கு, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவளித்தன. பெரும்பான்மைக்குத் தேவையான எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கூட்டணிக்கு இருந்ததால், வேறு வழியின்றி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை பதவியேற்றிட கவர்னர் அழைத்தார்.

ஜனநாயகப் படுகொலையால் இரண்டு முறை ஆட்சியை இழந்த இயக்கம், தி.மு.க. இந்தியாவில் எந்த மாநிலத்தில், எப்போது இத்தகைய கொடூரம் நிகழ்ந்தாலும், உடனடியாக தன் உணர்வை வெளிப்படுத்தவும், பாதிக்கப்படும் ஜனநாயக சக்திகளுக்கு தார்மீக ஆதரவைத் தெரிவிக்கவும் அண்ணா, கருணாநிதி காலத்திலிருந்து இன்று வரை, தி.மு.க. தயங்கியதோ தவறியதோ இல்லை.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்குப் பிறகு, அங்கே புதைகுழியிலிருந்து ஜனநாயகம் மெல்ல உயிர்த்தெழுந்த நிலை கண்டதும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் புதிய ஆட்சி அமைவதற்கு சூத்திரதாரியாகச் செயல்பட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினேன். அந்த வாழ்த்தை அன்புடன் ஏற்றுக்கொண்டதுடன், சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணியின் பதவியேற்பு விழாவிலும் பங்கேற்க வேண்டும் என எனக்கு அன்புடன் அழைப்பை விடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்டு, மும்பை சென்றேன்.

பதவியேற்பு நாளான கடந்த மாதம் 28-ந்தேதி மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்ற மராட்டிய மாவீரன் சிவாஜி திடலுக்கு சென்றேன். தமிழ்நாட்டின் சார்பில், தி.மு.க. தலைவர் என்ற முறையில் சென்றிருந்த உங்களில் ஒருவனான எனக்கு, மேடையில் நடுநாயகமாக அமரும் வாய்ப்பை தந்தனர். அது தனிப்பட்ட எனக்கானது அல்ல, தி.மு.க. எனும் மகத்தான பேரியக்கத்துக்கு அளிக்கப்பட்ட மரியாதை.

மாநிலக் கட்சியான தி.மு.க. மீண்டும் மீண்டும் இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத ஆற்றல் மிகுந்த சக்தியாக விளங்குகிறபோது, அன்பான எதிரிகளான அரசியல் பிரமுகர்கள் சும்மா இருப்பார்களா? இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனாவை தி.மு.க ஆதரிப்பதா? மராட்டியத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்ட பால்தாக்கரேவின் கட்சிக்குத் துணை நிற்பதா? என கட்சியை நோக்கி கேள்விக் கணைகள் பாய்கின்றன.

மாநிலக் கட்சிகளாக இருந்தாலும், கொள்கை ரீதியாக தி.மு.க.வும், சிவசேனாவும் மாறுபட்டவை. அதேவேளை குதிரை பேரத்தால் ஜனநாயகத்துக்கு புதைகுழி தோண்டப்படும்போதும், மாநில உரிமைகளைப் பாதுகாத்து, ஜனநாயகத்தை மீட்டெடுத்திட தார்மீக ஆதரவை வழங்குவது என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு.

சிவசேனா கட்சி தொடங்கப்பட்டபோது, அங்கு வாழும் தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்தது. இந்த அபாயச் சூழலை விளக்கி அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். அதன்பிறகு, மராட்டியம் உள்பட பல மாநிலங்களிலும் தமிழர்கள் மீதான தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது.

1978-ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி மும்பை சென்றார். அப்போது அவரை பால்தாக்கரே சந்தித்து, மாநில உரிமைகள் தொடர்பாக அவர் கடைப்பிடித்த உறுதியான நிலைப்பாட்டை பாராட்டினார். மராட்டியத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் அந்த சந்திப்பு அமைந்தது. 2001-ம் ஆண்டு நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோதும், பால்தாக்கரே அதை கண்டித்தார். சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகையிலும் கண்டன செய்தி வெளியிடப்பட்டது.

அடிப்படைக் கொள்கைகளில் பல வேறுபாடுகள் இருந்தாலும், ஜனநாயகத்தின் மாண்பையும் மாநிலத்தின் நலன்களையும் பாதுகாப்பதற்கான புதிய தொடக்கமாக அமைந்திருக்கிறது மராட்டிய உறவு. அதிகார கொம்பில் தொங்கிக் கொண்டு ஜனநாயகப் பூமாலையைப் பிய்த் தெறிய நினைத்த பிற்போக்கு சக்திகளிடமிருந்து அதனைப் பத்திரமாக மீட்டெடுத்திருக்கிறது, மராட்டிய முதல்-மந்திரி பதவியேற்பு விழா. தி.மு.க. அதில் பங்கேற்றதும், அதற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டதும் ஜனநாயகம் காக்கும் தொடர்ச்சியான போரில் தி.மு.க. எப்போதும் இந்தியாவுக்கு வழிகாட்டும் இயக்கம் என்ற பெருமிதத்தால் தான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story