சென்னையில் காற்று மாசை தொடர்ந்து மற்றொரு அபாயம்; நுரைக்கும் மெரீனா பீச்


சென்னையில் காற்று மாசை தொடர்ந்து மற்றொரு அபாயம்; நுரைக்கும் மெரீனா பீச்
x
தினத்தந்தி 1 Dec 2019 3:53 AM GMT (Updated: 1 Dec 2019 3:53 AM GMT)

சென்னையில் காற்று மாசுபாட்டை தொடர்ந்து மெரீனா பீச்சின் கரையோரம் அலைகளுக்கு பதில் நுரை தோன்றியுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

சென்னை மக்களை கடந்த மாதத்தில் காற்று மாசுபாடு பாதிப்பு ஏற்படுத்தியது என செய்திகள் வெளிவந்தன.  இதனால் சென்னை மக்களுக்கு சுவாச பாதிப்பு, இருமல் தொந்தரவு போன்றவை ஏற்பட்டது.  இந்நிலையில், சென்னை மெரீனா பீச்சில் ரசாயன கலப்பினால் ஏற்பட்ட நுரை, கரைகளில் நிரம்பி பனி படர்ந்தது போன்று காட்சியளிக்கிறது.

சென்னையில் வசிப்போர் விடுமுறை நாட்களில் பொழுதுபோக்க மெரீனா பீச்சிற்கு செல்வது வழக்கம்.  எனினும், நேற்று காலையில் மெரீனா பீச்சின் கரையோர பகுதியில் வழக்கம்போல் அலைகள் வீசுவதற்கு பதிலாக வெண்ணிறத்தில் நுரைகளே தென்பட்டன.  அதில் இருந்து துர்நாற்றமும் வீசியது.

இதுபற்றி அந்த பகுதியில் வசித்து வரும் மீனவர் ஒருவர் கூறும்பொழுது, தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளின் கழிவுகள் கடலில் விடப்படுகின்றன.  இதுவே உண்மை.  இதனால் இதுபோன்ற நுரை ஏற்பட்டு அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என கூறியுள்ளார்.

எனினும் கடந்த 2 நாட்களாக சென்னையில் பெய்த மழையால் நுரை ஏற்பட்டிருக்க கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் தெரிவித்து உள்ளனர்.  மழையால், ஆற்றில் இருந்து தண்ணீர் கடலில் கலந்து அதில் உள்ள பொருட்கள் மற்றும் பிற கழிவுகள் நுரைத்து இதுபோன்று வெள்ளை நிற நுரையாக வெளிவருகின்றன என கூறப்படுகிறது.

எனினும், நுரைகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் கலந்திருக்கும் என்பது அறியாமல் அவற்றை கைகளில் எடுத்து பீச்சில் சிறுவர்கள் சிலர் விளையாடுகின்றனர்.  இதுபற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story