நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலி: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலி: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு
x
தினத்தந்தி 1 Dec 2019 9:12 PM GMT (Updated: 1 Dec 2019 9:12 PM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சென்னை,

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன. நேற்று முன்தினம் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 938 மில்லியன் கன அடியாகவும், சோழவரம் ஏரியின் நீர்மட்டம் 94 மில்லியன் கன அடியாகவும், புழல் ஏரியின் நீர்மட்டம் 1,604 மில்லியன் கன அடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 649 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.

சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து 470 கனஅடியும், சோழவரம் ஏரியில் இருந்து 11 கனஅடியும், புழல் ஏரியில் இருந்து 89 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 25 கனஅடியும் தினசரி தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த மழை ஏரிகளின் நீர்மட்டத்தை ஒரே நாளில் வெகுவாக உயர்த்தி இருக்கிறது.

அதன்படி ஒரே நாள் மழையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 51 மில்லியன் கனஅடி உயர்ந்து நேற்று 989 மில்லியன் கனஅடியாக இருக்கிறது. சோழவரத்தில் 2 மில்லியன் கனஅடி உயர்ந்து 96 மில்லியன் கனஅடியாகவும், புழலில் 35 மில்லியன் கனஅடி உயர்ந்து 1,639 மில்லியன் கனஅடியாகவும், செம்பரம்பாக்கத்தில் 100 மில்லியன் கனஅடி உயர்ந்து 749 மில்லியன் கனஅடியாகவும் நீர்மட்டம் இருக்கிறது.

ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story