மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக கோரிக்கை


மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக கோரிக்கை
x
தினத்தந்தி 2 Dec 2019 10:51 AM GMT (Updated: 2 Dec 2019 10:51 AM GMT)

மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசியதற்காக பாஜக துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவின் தேசிய தலைமைக்கு தமிழக பாஜக பரிந்துரை செய்து உள்ளது.

 சென்னை,

புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி. அரசகுமார் கலந்து கொண்டு  பேசும்பொழுது, எம்.ஜி.ஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின்.  அவர் நினைத்தால் கூவத்தூர் சம்பவத்தின் போதே முதல்வராகியிருக்க முடியும்.  ஆனால் அவர் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார்.  காலம் வரும், கட்டாயம் மு.க. ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆவார் என பேசினார்.

அவரது இந்த பேச்சு பா.ஜ.க.வினரிடையே சலசலப்பினை ஏற்படுத்தியது.  இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தனது பேச்சு குறித்து பேட்டி அளித்த பி.டி.அரசகுமார், என்னுடைய தனிப்பட்ட உணர்வுகளை நான் வெளிப்படுத்தினேன்.  மு.க. ஸ்டாலினை சாதாரணமாக தான் வாழ்த்தினேன்.  கட்சி தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதனை ஏற்க தயார் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் மு.க. ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கட்சி தலைமைக்கு  தமிழக பாஜக கடிதம் அனுப்பி உள்ளது.

தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை கட்சி சார்பில் எந்த நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் பி.டி.அரசகுமார் கலந்துக்கொள்ள கூடாது என தமிழக பாஜக கூறி உள்ளது.

Next Story