ஆளுங்கட்சியின் ஏவலாளராக மாறிவிட்டது: அ.தி.மு.க. அலுவலகத்திலேயே மாநில தேர்தல் ஆணையம் செயல்படலாம் - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு


ஆளுங்கட்சியின் ஏவலாளராக மாறிவிட்டது: அ.தி.மு.க. அலுவலகத்திலேயே மாநில தேர்தல் ஆணையம் செயல்படலாம் - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
x
தினத்தந்தி 2 Dec 2019 10:30 PM GMT (Updated: 2 Dec 2019 9:38 PM GMT)

ஆளுங்கட்சியின் ஏவலாளராக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது என்றும் அ.தி.மு.க. அலுவலகத்திலேயே மாநில தேர்தல் ஆணையம் செயல்படலாம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எந்த சட்ட விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், நகர்ப்புற அமைப்புகளைத் தவிர்த்துவிட்டு, டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே உள்ளாட்சித்தேர்தல் நடக்கும் என்று அறிவித்துள்ளதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று வருடங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த முதுகெலும்பு இல்லாத இந்த ஆணையமும், அ.தி.மு.க. அரசும் இன்றைக்கு முழுமையாக அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குக் கூட வக்கில்லாமல், திக்குத் தெரியாமல் திணறி, விழி பிதுங்கி நிற்பது வெட்கக் கேடானது.

எங்களுக்கு தேர்தலைச் சந்திக்க திராணி இருக்கிறது, தெம்பு இருக்கிறது என்று அரசு மேடைகளில் வீராவேசம் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சில நாட்களிலேயே அந்தர் பல்டி அடித்து, அத்து மீறிய அரசு அதிகாரம் என்ற மயக்கத்தில் இருந்து கொண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தலை நடத்துங்கள் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் கெஞ்சிக் கூத்தாடி இருப்பது, மக்களைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள அச்சத்தையும் மனநடுக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

பல்வேறு காலக்கட்டங்களில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் சரமாரியான குட்டுகளையும் கண்டனங்களையும் வாங்கியும், முதல்-அமைச்சரும் திருந்தவில்லை; மாநில தேர்தல் ஆணையரும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை. ஆகவே, இனி மாநில தேர்தல் ஆணையத்திற்கு தனி அலுவலகம் தேவையில்லை. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையில் தனது அலுவலகத்தையும் நடத்திக் கொள்ளலாம் என்கிற அளவிற்கு தேர்தல் ஆணையம் ஐக்கியப்படுத்திக் கொண்டு, தரம் தாழ்ந்து தகுதி இழந்திருக்கிறது.

உயர்நீதிமன்ற நீதிபதிக்குரிய பணிப் பாதுகாப்பு உள்ள மாநில தேர்தல் ஆணையர் தன் நிலை மறந்து இப்படி ஆளுங்கட்சியின் ஏவலாளராக மாறி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காலில் போட்டு மிதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

சட்டப்படியான நடைமுறைகளை முடித்து உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறி உள்ளார்கள். தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வார்டு மறுவரையறை குறித்து முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்கள். ஜனநாயகத்திற்கு விரோதமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து இரு மாவட்டங்களுக்கு ஒரு மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், ஒரு யூனியனுக்கு இரண்டு அல்லது மூன்று மாவட்ட கலெக்டர்கள், இரு அல்லது மூன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் என்று நிர்வாக அலங்கோலத்தின் மொத்த உருவமாக இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, கேவலமானது.

ஒரு மாவட்டப் பஞ்சாயத்திற்கு எந்த மாவட்ட நிர்வாகத்திலிருந்து நிதி ஒதுக்கப்படும் என்ற தெளிவுகூட இல்லை. பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி செயல்பட முடியாத ஒரு மாநிலத் தேர்தல் ஆணையர் தமிழ்நாட்டிற்குத் தேவையா என்ற முக்கிய கேள்வியே எழுந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு யாராவது நீதிமன்றம் சென்று தடை பெற வேண்டும் என்பது அ.தி.மு.க. அரசின் உள்நோக்கமாகவும் ஆசையாகவும் இருந்தாலும், தி.மு.க. ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறது.

ஆகவே, அதிகாரம், மாநில தேர்தல் ஆணையம், பொங்கலுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே 1000 ரூபாய் வினியோகம் போன்ற எத்தனை அதிகார துஷ்பிரயோகங்களுடன் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் களத்திற்கு வந்தாலும், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சந்திக்கும்.

அதுமட்டுமின்றி, மக்களின் பேராதரவுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் மாபெரும் வெற்றியைக் குவித்து, அ.தி.மு.க. அரசின் முகத்தில் கரியைப் பூச தி.மு.க. தொண்டர்களும், கூட்டணி கட்சியினரும், மக்களும் தயாராகவே இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story