உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி


உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை  - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 3 Dec 2019 12:14 PM GMT (Updated: 3 Dec 2019 12:14 PM GMT)

உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

கோவை,

கோவை மேட்டுப்பாளையம் அருகே நடூரில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை முதலமைச்சர் பழனிசாமி நேரில் பார்வையிட்டார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் உடன் இருந்தனர். இதனையடுத்து  17 பேர் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆறுதல் கூறினார். 

தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.  ஏற்கனவே அரசு அறிவித்த ரூ.4 லட்சத்துடன் சேர்த்து கூடுதலாக ரூ.6 லட்சம் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும்.

இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். அந்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story