இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு


இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Dec 2019 12:00 AM GMT (Updated: 8 Dec 2019 10:04 PM GMT)

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனுக்கள் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பெறப்படுகிறது. மனு தாக்கலுக்கு 16-ந் தேதி கடைசி நாளாகும். 17-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 19-ந் தேதி வரை மனுக் களை திரும்பப் பெறலாம்.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி அலுவலக செயலரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

மனு தாக்கலுக்கு வேட்பாளருடன் முன்மொழிபவர் ஒருவர், வேட்பாளர் விரும்பும் 3 பேர் உள்பட 5 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27-ந் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ந் தேதியும் நடக்கிறது. வாக்குகள் ஜனவரி 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்கள் ஜனவரி 6-ந் தேதி பதவி ஏற்கின்றனர்.

அந்தந்த உள்ளாட்சி மன்ற தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

இந்த தகவலை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story