திருச்சியில் கொடூரம்: சிறுவனை அடித்துக்கொன்று குப்பை மேட்டில் உடல் புதைப்பு


திருச்சியில் கொடூரம்: சிறுவனை அடித்துக்கொன்று குப்பை மேட்டில் உடல் புதைப்பு
x
தினத்தந்தி 10 Dec 2019 9:55 PM GMT (Updated: 10 Dec 2019 9:55 PM GMT)

திருச்சியில் சிறுவனை அடித்துக்கொன்று குப்பை மேட்டில் உடலை புதைத்தனர்.

திருச்சி,

திருச்சி அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் அலியார். இவரது மகன் அப்துல் வாஹித் (வயது 12). 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 3-ந் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் அப்துல் வாஹித் கிடைக்கவில்லை. இது குறித்து அலியார் கடந்த 6-ந் தேதி அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிறுவனை தேடிவந்தனர்.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சேகர். இவரது மனைவி கயல்விழி. இவர் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஆவார். இத்தம்பதியின் இரண்டாவது மகன் முத்துக்குமார். இவர் பன்றிகள் வளர்த்து வருவதாகவும், அவற்றை பார்க்க அடிக்கடி அப்துல்வாஹித் வருவதும் தெரிந்து, சிறுவன் மீது அவர்கள் மிகவும் கோபமாக இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக முத்துக்குமாரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையின்போது கூறியதாவது:-

எனது அண்ணன் (பெரியப்பா பையன்) சிலம்பரசன் எங்களுடைய பன்றியை அடிக்கடி திருடி விற்பனை செய்து வந்தான். அவனுக்கு அப்துல் வாஹித் உதவி செய்வதாக கூறப்பட்டது. குறிப்பாக பன்றிகள் எங்கே நிற்கின்றன என அவன் வேவு பார்த்து சொல்வதாகவும் கூறினார்கள். இன்னொரு முறை அவன் வந்தால் கட்டி போடுங்கள் என நான் கூறினேன்.

இந்நிலையில் கடந்த 3-ந் தேதி மாலை அப்துல்வாஹித் எங்கள் பகுதிக்கு வந்தான். அப்போது அவனை 3 பேர் சேர்ந்து அடித்துக்கொன்று குப்பை மேட்டில் போட்டு மூடி புதைத்து விட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அரியமங்கலம் குப்பை கிடங்கில் சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தை, போலீசில் சிக்கியவர்கள் அடையாளம் காட்டினர். பொக்லைன் எந்திரம் மூலம் சிறுவன் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

சிறுவன் கொலை செய்யப்பட்டு 6 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் உடல் லேசாக அழுகிய நிலையில் காணப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. பன்றி வளர்ப்பு தொடர்பாக சிலம்பரசனுக்கும், முத்துகுமாரின் சகோதரருக்கும் இடையே பகை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளான்.

இந்த சம்பவத்தில் முத்துக்குமார் உள்பட 4 பேர் மீது அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story