உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தி.மு.க. கையாண்ட யுக்திகள் தோல்வி கண்டுள்ளன; அமைச்சர் ஜெயக்குமார்


உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தி.மு.க. கையாண்ட யுக்திகள் தோல்வி கண்டுள்ளன; அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 11 Dec 2019 11:56 AM GMT (Updated: 11 Dec 2019 11:56 AM GMT)

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தி.மு.க. கையாண்ட யுக்திகள் தோல்வி கண்டுள்ளன என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களுக்கு திட்டமிட்ட தேதியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடக்கிறது.

1991 கணக்கெடுப்பின் படி உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது.

பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததால் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி  சுப்ரீம் கோர்ட்டில் திமுக மற்றும் காங்கிரஸ், மதிமுக, தொல் திருமாவளவன் மற்றும் இடதுசாரி கட்சிகள்  தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் ஆஜராகி வாதாடினார்.

இதேபோன்று உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட 10க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில்  இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பாப்டே, ஊராட்சி  பதவி உள்பட அனைத்து பதவிகளுக்கும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, உள்ளாட்சி தேர்தல் வழக்கில் தி.மு.க. கூட்டணிக்கு சுப்ரீம் கோர்ட்டு சரியான குட்டு வைத்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தி.மு.க. கையாண்ட யுக்திகள் தோல்வி கண்டுள்ளன என கூறியுள்ளார்.

Next Story