பேஸ்புக் மெசேஞ்சரில் குழந்தைகள் ஆபாச வீடியோ பகிர்ந்த சென்னையை சேர்ந்த 10 பேருக்கு வலை


பேஸ்புக் மெசேஞ்சரில் குழந்தைகள் ஆபாச வீடியோ பகிர்ந்த சென்னையை சேர்ந்த 10 பேருக்கு வலை
x
தினத்தந்தி 12 Dec 2019 8:42 AM GMT (Updated: 12 Dec 2019 8:42 AM GMT)

குழந்தைகள் ஆபாசப்படம் விவகாரத்தில் தனி மெசேஞ்சர் குரூப்பில் சென்னையை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர்.

சென்னை

இந்திய அளவில் தமிழகத்தில், அதிலும் குறிப்பாக சென்னையில்தான் குழந்தைகள் ஆபாச வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

தமிழக காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தலைமையில் செயல்படுகிறது.

இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, தவறான வழியில் செல்லும் இளம் வயதினர் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலமே முடியும் என்ற நோக்கத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் ஆபாசப்படம் பதிவேற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று முதல் கைது சம்பவம் நடந்துள்ளது. வரும் நாட்களில் அதிகம் பேர் சிக்குவார்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.

குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த திருச்சி பாலக்கரை காஜாபேட்டையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் (42) என்பவரை திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் முதல் கைது சம்பவமாக இது அமைந்துள்ளது.

ஐடிஐ படித்து விட்டு ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வரும் அல்போன்ஸ் ராஜ், நிலவன், நிலவன், ஆதவன் என்கிற  பெயரில் போலி கணக்கில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து, பகிர்ந்து வந்துள்ளார்.

இவர் மீது போக்சோ சட்டத்தில் 3 பிரிவுகள், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் 2 பிரிவுகள் என மொத்தம் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜை திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வனிதா, கைதானவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அல்போன்ஸ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள அல்போன்ஸ்ராஜ், பேஸ்புக் மெசேஞ்சரில் தனியாக குழு நடத்தி, அதில் வீடியோக்களை பகிர்ந்துள்ளதும். சிலர் வீடியோக்களை அனுப்பியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த குழுவில் உள்ள 100 க்கும் மேற்பட்ட பெயர் கொண்ட பட்டியலை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வீடியோக்களை அதிகம் பகிர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பகிர்ந்தவர்கள் பட்டியலில் சென்னையைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், கைது நடவடிக்கை மேலும் தொடரும் என்றும் காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

Next Story