வகுப்பறையில் படுத்து தூங்கிய ஆசிரியர் அதிகாரிகள் விசாரணை


வகுப்பறையில் படுத்து தூங்கிய ஆசிரியர் அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 12 Dec 2019 10:00 PM GMT (Updated: 12 Dec 2019 8:08 PM GMT)

பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் படுத்து தூங்கியது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சி கன்னிகாபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக சிவக்குமாரும், உதவி ஆசிரியராக மோகனும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி உதவி ஆசிரியர் மோகன் வகுப்பறையில் தரையில் படுத்து தூங்கினார்.

பாடம் நடத்தாமல் ஆசிரியர் தூங்குவதை பார்த்தசிலர் வீடியோ எடுத்து அதனை வாட்ஸ்-அப்பில் பரப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் நெமிலி வட்டார கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வட்டார கல்வி அதிகாரிகள் கன்னிகாபுரம் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் சிவக்குமார், உதவி ஆசிரியர் மோகன் மற்றும் மாணவ- மாணவிகளிடம் நேரடி விசாரணை நடத்தினர். அப்போது, ஆசிரியர் மோகன் நன்றாக பாடம் எடுக்கக்கூடிய ஆசிரியர். உடல்நல குறைவால் தான் அவர் படுத்து தூங்கினார். அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர். இதுதொடர்பாக முதன்மை கல்வி அதிகாரிக்கு விசாரணை அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Next Story