சென்னை மாநகராட்சியில் எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் ஊழல் - திமுக தலைவர் ஸ்டாலின்


சென்னை மாநகராட்சியில் எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் ஊழல் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:20 AM GMT (Updated: 13 Dec 2019 10:20 AM GMT)

சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்கு பதில் எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்கு பதில் எம்-சாண்ட்(M-sand) பயன்படுத்தியதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியில், ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட் பயன்படுத்தியதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியால் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்றுமணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதில் எம்-சாண்ட் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆற்றுமணலை விட எம்-சாண்ட் விலை குறைவு என்ற நிலையில், ஒப்பந்தங்களில் கான்கிரீட்  கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் எம்-30 வகை மணலின் சந்தை விலை 30 சதவீதம் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள ஊழலை,  ஊழல் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story