சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலான மழை


சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலான மழை
x
தினத்தந்தி 14 Dec 2019 5:23 AM GMT (Updated: 14 Dec 2019 5:23 AM GMT)

தமிழகம் முழுவதும் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, புரசைவாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் சிர‌ம‌ம் அடைந்தாலும், 2 வாரங்களுக்கு பிறகு மழை பெய்திருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதேபோல் செங்கல்பட்டு மாமல்லபுரம் புதுப்பட்டினம் திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன், அரை மணி நேரம் கன மழை கொட்டியது. மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

புதுச்சேரியில் காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், 8 மணியளவில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யத்துவங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளி செல்லும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவர்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவிலிமேடு, ஓரிக்கை, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. 

விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான காணை, நன்னாடு, ஜானகிபுரம், பில்லூர், முண்டியம்பாக்கம், சாலாமேடு, கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், அதிகாலை முதல் கன மழை பெய்தது. நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்த‌து. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேசமயம் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூரில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

கரூர் நகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான மாயனூர், வெள்ளியணை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி மாநகரில் சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையம், உறையூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், அதேபோல் புற நகர் பகுதிகளான துறையூர், திருவெறும்பூர், சமயபுரம் டோல்கேட், பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

தஞ்சை சுற்றுவட்டார பகுதியில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சையின் செங்கிப்பட்டி, வல்லம் வெட்டிக்காடு திருவையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்த‌து. இந்த மழை சம்பா சாகுபடிக்கு பயனுள்ளதாக அமையும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் காலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்ததால், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் பலத்த மழை பெய்தது. அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்படக் கூடும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோவை, கொடைக்கானல், ராசிபுரம், ராணிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Next Story