உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: மரண அடி வாங்கியது அதிமுக தான் அமைச்சருக்கு ஸ்டாலின் பதில்


உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: மரண அடி வாங்கியது அதிமுக தான் அமைச்சருக்கு ஸ்டாலின் பதில்
x
தினத்தந்தி 14 Dec 2019 7:11 AM GMT (Updated: 14 Dec 2019 7:11 AM GMT)

உள்ளாட்சித் தேர்தலில் வழக்கில் மரண அடி வாங்கியது அதிமுக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 11 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு தொடர்பாக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரனையின் முடிவில் நீதிபதி எஸ்.ஏ.போப்டே, இந்த விவகாரத்தில் மீண்டும் தலையிட விரும்பவில்லை எனவும் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் தெளிவுபடுத்த ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “உள்ளாட்சி தேர்தல் வழக்கில் திமுகவுக்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது;-

“உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் மரண அடி வாங்கியது அதிமுக தான். திமுகவின் ஜனநாயகம் காக்கும் பணியை உச்சநீதிமன்றம் பாராட்டவே செய்தது.

அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் தேர்தலை நடத்த துடிக்கும் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்பு, அர்ப்பணிப்பு உணர்வு உள்ள திமுக வேட்பாளர்களை களமிறக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Next Story