கள்ளக்காதலியின் மகளை திருமணம் செய்து தராததால் மூதாட்டி மீது திராவகம் ஊற்றி கழுத்தை அறுத்து கொடூர கொலை தப்ப முயன்ற கொலையாளியை பொதுமக்கள் அடித்து கொன்றனர்


கள்ளக்காதலியின் மகளை திருமணம் செய்து தராததால் மூதாட்டி மீது திராவகம் ஊற்றி கழுத்தை அறுத்து கொடூர கொலை தப்ப முயன்ற கொலையாளியை பொதுமக்கள் அடித்து கொன்றனர்
x
தினத்தந்தி 14 Dec 2019 10:40 PM GMT (Updated: 14 Dec 2019 10:40 PM GMT)

மூதாட்டி மீது திராவகம் ஊற்றி, கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கட்டிட மேஸ்திரியை பொதுமக்கள் விரட்டி சென்று அடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள குருசாமிபாளையம் தோப்புக்காட்டை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி தனம் (வயது 65). இவர்களுக்கு ரவிக்குமார், ராஜா, குணசேகரன் என 3 மகன்கள் இருந்தனர். ரவிக்குமாருக்கு திருமணமாகி திவ்யபாரதி, வாசுகி, வசந்தி என 3 மகள்கள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ரவிக்குமார் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். இதையடுத்து ரவிக்குமாரின் மனைவி விஜயா பள்ளிபாளையத்தில் மகள்களுடன் தங்கி ஒரு பனியன் கம்பெனியில் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

அப்போது விஜயாவுக்கும், தர்மபுரி மாவட்டம் தடங்கம் அவ்வை நகரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சாமுவேல்(40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதனால் விஜயாவின் மகள்கள் அவரை விட்டு பிரிந்து சென்றனர். அதில் வாசுகி காதல் திருமணம் செய்து கொண்டார். வசந்தி தனது பாட்டி தனத்துடன் தங்கி ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். விஜயா, சாமுவேலுடன் தர்மபுரியில் தனியாக வசித்து வந்தார்.

மூதாட்டி குத்திக்கொலை

இந்த நிலையில் சாமுவேல், விஜயாவின் 3-வது மகளான வசந்தியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வசந்தி மற்றும் அவரது பாட்டி தனத்திடம் சாமுவேல் அடிக்கடி தகராறும் செய்து வந்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு சாமுவேல் குருசாமிபாளையம் தோப்புக்காட்டிற்கு திராவக(ஆசிட்) பாட்டிலுடன் சென்று உள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தனத்திடம், வசந்தி எங்கே? எனக் கேட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

ஆனால் வசந்தி இருக்கும் இடத்தை தனம் கூறாததால் ஆத்திரம் அடைந்த சாமுவேல், தனத்தின் மீது திராவகத்தை வீசியதோடு, தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தினார். பின்னர் அவர் கழுத்தை அறுத்தார். இதில் தனம் அந்த இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். முன்னதாக தனத்தின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் முன்பு திரண்ட பொதுமக்கள் இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பொதுமக்களின் உதவியோடு சாமுவேலை பிடிக்க முயன்றனர்.

கொலையாளியும் சாவு

இதனால் சாமுவேல், வீட்டிற்குள் இருந்தவாறு வெளியே நின்றவர்கள் மீது திராவகத்தை ஊற்றி உள்ளார். இதில் பொதுமக்களில் சிலரும், போலீசாரும் காயம் அடைந்தனர். பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் சாமுவேலை பிடிக்க முற்பட்டனர். அதற் காக பொதுமக்கள் சிலர் தனத்தின் வீட்டின் ஓட்டை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது சாமுவேல், இறந்த தனத்தின் கழுத்தை மீண்டும் அறுத்துக் கொண்டு இருந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கூச்சலிடவே, இன்ஸ்பெக்டர் கணேசன் வீட்டிற்குள் துப்பாக்கியால் சுட்டு உள்ளார். ஆனால் துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியேறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சாமுவேல் மீண்டும் திராவகம் ஊற்றியதில் இன்ஸ்பெக்டர் கணேசன் காயம் அடைந்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த சாமுவேல் தப்ப முயன்றார். அப்போது பொதுமக்கள் விரட்டியதில் அவர் கீழே தவறி விழுந்தார். இதையடுத்து பொதுமக்கள் சிலர் சாமுவேலை கற்கள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதில் சாமுவேல் அந்த இடத்திலேயே இறந்தார்.

18 பேர் காயம்

முன்னதாக சாமுவேல் திராவகம் வீசியதில் 4 போலீசார் உள்பட 18 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 மணி நேர போராட்டம்

நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் தனத்தின் வீட்டிற்கு சாமுவேல் சென்றுள்ளார். அப்போது வீட்டில் வசந்தி இல்லாததால் அவரை வரச்சொல்லும்படி தனத்தின் மீது திராவகத்தை ஊற்றி மிரட்டி உள்ளார். இதில் தனம் கூச்சலிட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு அவரை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவை ஏதும் பலன் அளிக்கவில்லை. பின்னர் இரவு 11 மணியளவில் சாமுவேல் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து தப்ப முயன்றபோது கீழே தவறி விழுந்ததாலும், பொதுமக்கள் தாக்கியதாலும் இறந்தார். சுமார் 3 மணி நேர போராட்டத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

கொலையாளி மீது 15 திருட்டு வழக்குகள்

பொதுமக்கள் தாக்கியதில் இறந்த சாமுவேல் மீது தர்மபுரி மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சாமுவேல் பல பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. போலீசார் தன்னை எளிதில் பிடிக்காதவாறு, சாமுவேல் வழக்குகளில் கைதாகும் போது வெவ்வேறு முகவரிகளை தெரிவித்து ஏமாற்றி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story