திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது ; மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது ; மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2019 2:57 PM GMT (Updated: 21 Dec 2019 5:02 PM GMT)

சென்னையில் நாளை மறுநாள் நடக்கும் திமுக பேரணியில் பங்கேற்க மாட்டோம் என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பேரணி சென்னையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு திரையுலகினர், வணிகர்கள், மாணவ அமைப்பினர் உள்பட 98 அமைப்புகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளார்.

பேரணியில் ஒரு லட்சம் பேரை திரட்டுவதற்கு தி.மு.க. திட்டமிட்டுள்ளது. எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே தொடங்கும் பேரணி புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடையும் என்று சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த பேரணியில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், திமுக நடத்தும் பேரணியில் பங்கேற்க மாட்டோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது. கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்று விட்டதால் மக்கள் நீதி மய்யம், பேரணியில் பங்கேற்காது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 

முன்னதாக, அழைப்பு விடுத்தால் திமுக பேரணியில் பங்கேற்போம் என கமல் தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Next Story