திமுக பேரணியில் போலீசாரை விட பேரணிக்கு வந்தவர்கள் கூட்டம் குறைவு தான் -அமைச்சர் ஜெயக்குமார்


திமுக பேரணியில் போலீசாரை விட பேரணிக்கு வந்தவர்கள் கூட்டம் குறைவு தான் -அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 24 Dec 2019 8:25 AM GMT (Updated: 24 Dec 2019 8:25 AM GMT)

திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நடத்திய சென்னை பேரணியில் 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், இது அந்த கட்சிக்கு மிகப்பெரிய அசிங்கம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை,

எம்.ஜி.ஆர். நினைவுநாளை முன்னிட்டு, சென்னை வண்ணாரப்பேட்டையில் அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.  பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

108 அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தும் 5000 பேருக்கு மேல் திமுக நடத்திய பேரணியில் கூட்டம் கூடவில்லை. போலீசாரின்  கூட்டத்தைவிட பேரணிக்கு வந்தவர்கள் கூட்டம் குறைவு தான். மேலும் தமிழக அரசு எடுத்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் திமுக பேரணியில் வன்முறை ஏதும் ஏற்படவில்லை.

எம்.ஜி.ஆர்.  மறைந்து 32 ஆண்டுகள் ஆனாலும் அவரின் புகழ் இன்று வரை குறையவில்லை. அவரின் கருத்துகள் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலும் நீடிக்கும். நாங்கள் எல்லாம் இன்று வீரத்தோடு இருப்பதற்கு காரணம்  எம்ஜிஆர்  ஒருவர் தான் என்று கூறினார்.

சமூக வலைத்தளங்களில், தந்தை பெரியார் குறித்து பாஜக சார்பில் விமர்சிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், 'சமூக சிந்தனைக்காக வாழ்ந்த பெரியாரின் வாழ்க்கையை யார் கொச்சைப்படுத்தினாலும் அது தவறுதான்' என கூறினார்.

Next Story