சூரிய கிரகணத்தை பார்க்க சென்னையில் சிறப்பு ஏற்பாடுகள்


சூரிய கிரகணத்தை பார்க்க சென்னையில் சிறப்பு ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 24 Dec 2019 12:24 PM GMT (Updated: 24 Dec 2019 12:24 PM GMT)

நாளை மறுநாள் ஏற்படும் சூரிய கிரகணத்தை பார்க்க சென்னையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சென்னை,

சூரிய கிரகணம் நாளை மறுநாள் (26-ந்தேதி) நிகழ்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வு நிகழ்கிறது. சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்ப்பதற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

சூரியனை நிலவு மறைக்கும் அற்புத காட்சிதான் சூரிய கிரகணம். நிலவால் சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாது. எனவே சுற்றி இருக்கும் பகுதி நெருப்பு வளையம் போல் தெரியும். சூரியன் மறைக்கப்படுவதால் பூமியில் நிழல் விழும்.தென் தமிழகத்தில் 23 வருடங்களுக்கு பிறகு நெருப்பு வளையம் போன்று தோன்றும் முழு சூரிய கிரகணம் தெரியவுள்ளது. நெருப்பு வளைய சூரிய கிரகணமானது கேரளாவில் தொடங்கி தமிழகத்தின் 10 மாவட்டங்களில் முழுமையாக பார்க்க முடியும். மற்ற பகுதிகளில் பகுதி சூரிய கிரகண காட்சியை காணலாம்.

இந்த அரிய காட்சி நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்பட 9 மாவட்டங்களிலும் மிக தெளிவாக தெரியும். மற்ற மாவட்டங்களில் பகுதி அளவு தெரியும்.

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு நேர்க்கோட்டில் வரும்போது, சூரியன் மறைக்கப்படும். அதாவது நிலவின் நிழல், பூமியின் மீது விழும். இது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே, சூரியனை நிலவு முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்று கூறப்படுகிறது. இந்த சூரிய கிரகணமானது காலை 8:00 மணி முதல் 11:16 மணி வரை 97.3 சதவீதம் முழுமையாக சூரியனை மறைக்கிறது.

இந்த நிகழ்வின்போது வெளியே வரக்கூடாது என்பதல்ல. பார்த்து ரசிக்கலாம். ஆனால் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. ‘மைலார்’ கண்ணாடி மூலம் பார்க்க வேண்டும்.

இதுபற்றி அறிவியல் பலகையின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார் கூறியதாவது:-

சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கம், மாவட்ட அறிவியல் தொழில்நுட்ப மையங்கள், விஞ்ஞான்பிரசார் உள்ளிட்ட அறிவியல் அமைப்புகள் பொதுமக்கள் பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றன. 

அறிவியல் மையங்களில் டெலஸ்கோப் வைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் சூரிய கிரகண நிழலை பார்க்க முடியும் என கூறினார்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து பார்க்கும்போது, கிரகணத்தின் போது சூரியன் அதிகபட்சமாக பெங்களூருவில் 89.4%, சென்னையில் 84.6%, மும்பையில் 78.8%, ஐதராபாத்தில் 74.3%, அகமதாபாத்தில் 66%, டெல்லியில் 44.7%, கொல்கத்தாவில் 45.1%  மறைந்திருக்கும் 

வழக்கமாக சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்னதாகவே கோவில்களில் நடை அடைக்கப்படும்.

அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை இரவு 11 மணி முதல் வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை நடை அடைக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு வியாழக்கிழமை காலை திருப்பாவாடை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட ஆா்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

திருமலையில் உள்ள அன்னதானக் கூடமும் மூடப்பட உள்ளது. கிரகணத்திற்கு பிறகு நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்படும். தொடர்ந்து மதியம் 2 மணி முதல் பக்தா்கள் ஏழுமலையானை வழிபட அனுமதிக்கப்படுவர்.

Next Story