கோடநாடு எஸ்டேட் உள்பட ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களுக்கும் நானே உரிமையாளர் -சசிகலா


கோடநாடு எஸ்டேட் உள்பட ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களுக்கும் நானே உரிமையாளர் -சசிகலா
x
தினத்தந்தி 25 Dec 2019 6:50 AM GMT (Updated: 25 Dec 2019 8:38 AM GMT)

கோடநாடு எஸ்டேட் உள்பட ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களுக்கும் நானே உரிமையாளர் என வருமான வரித்துறைக்கு அளித்த விளக்கத்தில் சசிகலா கூறி உள்ளார்.

சென்னை,

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

சசிகலா, தனது கணவர் நடராஜன் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சிறையில் இருந்து 5 நாட்கள்  பரோலில்  வெளியே வந்தார். அப்போது சென்னையில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்தார். அதன் பின் ஒரு  ஒரு மாதத்திற்குப் பிறகு வருமானவரி  சோதனைகள்  நடத்தப்பட்டன. அப்போது ரூ1,900 கோடிக்கும் அதிகமான பணமாக்குதலுக்கான குறிப்புகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. 

இது தொடர்பாக விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியது. 2017-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி இந்த நோட்டீசு பெங்களூரு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டது.

இறுதியாக டிசம்பர் 11-ந்தேதி சசிகலா சார்பில் ஆடிட்டர் தனது பதில் அறிக்கையை தாக்கல் செய்தார்.

சசிகலாவுக்கு என்னென்ன சொத்துக்கள் இருக்கின்றன? அதில் எவ்வாறெல்லாம் வருமானம் வருகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 2016-17, 2017-18 நிதியாண்டுகளில் சசிகலாவிடம் இருந்த சொத்துக்களின் விவரங்களை அதில் பட்டியலிட்டு இருந்தனர். நமது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயா பிரிண்டர்ஸ் ஆகிய நிறுவனங்களில் முதலீடு இருப்பதாக சசிகலா குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஜெயா பார்ம் ஹவுஸ், ஜெ.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், ஜெய் ரியல் எஸ்டேட், கிரீன் பார்ம் ஹவுஸ் ஆகியவற்றில் சசிகலா பங்குதாரர் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கொடநாடு எஸ்டேட் மற்றும் 4 சொத்துக்களில் 2016 ஏப்ரல் 1-ல் இருந்து ஜெயலலிதா மரணம் அடைந்த 2016 டிசம்பர் 5-ந் தேதி வரை பங்குதாரராக இருந்ததாகவும், ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு பங்குதாரர் நிறுவனம் கலைக்கப்பட்டு அதன் உரிமையாளராக சசிகலா இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதன்படி ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சசிகலாவுக்கு சொந்தமானது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது மட்டும் அல்லாமல் இந்தோ தோகா கெமிக்கல், பார்மசூட்டிக்கல் லிமிடெட், ஆஞ்சநேயா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றில் சசிகலா டைரக்டராக இருப்பதாகவும் அதில் கூறி உள்ளனர்.

இத்துடன் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் 41 லட்சத்து 66 ஆயிரம் பங்குகளையும், ஆரே லேண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் பங்குகளையும், மேவிஸ் சாட்காம் நிறுவனத்தில் 7 லட்சத்து 2 ஆயிரம் பங்குகளையும், ராம்ராஜ் அக்ரோமில்ஸ் நிறுவனத்தில் 36 ஆயிரம் பங்குகளையும்  சசிகலா வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மதிப்பிழக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் மூலம் ரிசார்ட், ஷாப்பிங் மால், ஆலைகள் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கியதை வருமானத் துறையிடம் சசிகலா முழுமையாக மறுத்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச்சென்ற சொத்துக்களை யார் பெறுவார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கப்படாத நேரத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது, சசிகலா தன்னிடம் இருந்த செல்லாத  ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ரூ.1,674 கோடிக்கு சொத்து வாங்கியதாகவும், ரூ.237 கோடி பணத்தை கடனாக வழங்கியதாகவும் வருமான வரித்துறை தெரிவித்த தகவல் ஏற்கனவே வெளியானது.

Next Story