ஏரியில் மூழ்கி அக்காள்-தங்கை பலி


ஏரியில் மூழ்கி அக்காள்-தங்கை பலி
x
தினத்தந்தி 28 Dec 2019 9:15 PM GMT (Updated: 28 Dec 2019 8:41 PM GMT)

ஏரியில் குளித்துக்கொண்டிருந்த அக்காள்-தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார், விவசாயி. இவருடைய மனைவி லதா. இவர்களுடைய மகன் ஆனந்த்(வயது 12), மகள்கள் அபிராமி(13), திவ்யா(10).

இதில் அபிராமி தேவபாண்டலத்தில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பும், திவ்யா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஆனந்த் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் 3 பேரும் வீட்டில் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், அபிராமியும், திவ்யாவும் மூக்கனூரில் உள்ள பெரிய ஏரியில் குளிக்க செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு சென்றனர். பின்னர் அவர்கள் ஏரியில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். இதனால் அவர்கள் நீரில் தத்தளித்தபடி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் குளித்து கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் இருவரும் நீரில் மூழ்கி விட்டனர். ஆனாலும் அங்கிருந்தவர்கள் தண்ணீருக்குள் குதித்து அபிராமியையும், திவ்யாவையும் மீட்டனர்.

தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள புதுப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story