தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்தினால் அதிமுக எதிர்க்கும் -அமைச்சர் உதயகுமார்


தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்தினால் அதிமுக எதிர்க்கும் -அமைச்சர் உதயகுமார்
x
தினத்தந்தி 7 Jan 2020 8:22 AM GMT (Updated: 7 Jan 2020 8:22 AM GMT)

தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்தினால் அதிமுக எதிர்க்கும் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.

சென்னை

தமிழக சட்டசபையில் ஆண்டின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. குடியுரிமை சட்டதிருத்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 2-வது நாளாக இன்றும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சபைக்குள் வந்தனர். மீண்டும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

கேரளா போல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற  வேண்டும் என துரைமுருகன் பேசினார். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும்போது ஏன் எதிர்க்கவில்லை? என அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

பாஜக கூட்டணியில் இருந்தபோது குடியுரிமை சட்டம் திருத்தப்படவில்லை என துரைமுருகன் பதில் அளித்தார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, அபுபக்கர் கோஷம் எழுப்பியதால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுபான்மையினருக்கு ஆதரவாக உள்ளதாக கூறும் அதிமுக, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஏன்? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதிமுகவால் ஒரு சிறுபான்மையினராவது பாதிக்கப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்ட முடியுமா என அமைச்சர் உதயகுமார் கேட்டார்.

துரைமுருகன் பேசும்போது, குடியுரிமை சட்டத்தை எதிர்க்கவில்லை, திருத்தத்தையே எதிர்க்கிறோம் என கூறினார்.

அமைச்சர் உதயகுமார் பேசும்போது, அசாமை தவிர வேறுஎந்த மாநிலத்திலும்  தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்த வில்லை. தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்த நினைத்தால் அதிமுக எதிர்க்கும் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.

Next Story