பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை?


பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை?
x
தினத்தந்தி 11 Jan 2020 11:15 PM GMT (Updated: 11 Jan 2020 9:52 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதல்-அமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

கடத்தூர், 

ஈரோடு மாவட்டம் கோபியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையையொட்டி 13-ந் தேதி அதாவது நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதல்- அமைச்சர் பழனிசாமியுடன் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் சில தனியார் பள்ளிக்கூடங்களில் அரசின் இட ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஒரு சில பள்ளிக்கூடங்களில் அதுபோல் உள்ளது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அடுத்த ஆண்டு என் கவனத்துக்கு யாரும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கொண்டு வந்தால் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.

அரசு பள்ளிக்கூடங்களில் காலை உணவு வழங்கப்படும் என வதந்திகளை பரப்பி வருகிறார்கள். காலை உணவு வழங்குவது குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்தியே தவிர வேறொன்றும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story