‘பொருளாதாரத்தில் வலிமை மிக்க நாடு இந்தியா’ தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு


‘பொருளாதாரத்தில் வலிமை மிக்க நாடு இந்தியா’ தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
x
தினத்தந்தி 12 Jan 2020 10:45 PM GMT (Updated: 12 Jan 2020 9:04 PM GMT)

‘பொருளாதாரத்தில் வலிமை மிக்க நாடாக இந்தியா உள்ளது’ என்று தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தூத்துக்குடி,

இந்திய தொழில் வர்த்தக சங்கம் தூத்துக்குடி சார்பில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா தூத்துக்குடியில் நேற்று நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். 37 சிறந்த ஏற்றுமதியாளர் மற்றும் தூத்துக்குடி துறைமுக உபயோகிப்பாளர் விருதுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பால் ஏற்றுமதியில் முன்னணி

மத்திய அரசு, ஏற்றுமதியை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் தான் நாடு பொருளாதாரத்தில் வலிமைமிக்க நாடாக மாறி வருகிறது. பிரதமர் மோடி பதவியேற்றபோது அதிக பால் உற்பத்தி செய்யும் 15 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தும் பால் ஏற்றுமதியில் முன்னேற முடியவில்லை. அதற்கு காரணம் நமது நாட்டின் பால் உலகளவில் தரமானதாக இல்லை. பசுக்கள் பராமரிப்பும் சுகாதாரமாக இல்லை.

பிரதமர் மோடி பதவியேற்றதும் பால் ஏற்றுமதியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். பசுக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான துல்லியமான தடுப்பூசி இயக்கத்தை அறிமுகம் செய்தார். இதன்மூலம் பால் உற்பத்தி அதிகரித்து, பால் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது.

தூத்துக்குடி சக்தி வாய்ந்த மண்

‘மேக் இன் இந்தியா திட்டம்’ மூலம் பல இளைஞர்கள் புதிய தொழில்களை தொடங்கி தொழில் வளர்ச்சியில் முன்னேறி வருகின்றனர். இந்த திட்டம் மூலம் தலைவர்கள், ராணுவ வீரர்கள் அணியும் குண்டு துளைக்காத ஆடைகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தூத்துக்குடி சக்தி வாய்ந்த மண். இங்கு நிறுவப்படும் எதுவும் தோல்வியடைய முடியாது. விமானம், ரெயில், சாலை, கடல் என 4 வழிகளிலும் இணைப்பு பெற்ற நகரமாக இது உள்ளது.

நீர்நிலைகளை கொண்டு வருவேன்...

தூத்துக்குடியின் வளர்ச்சியில் எனது பங்கும் நிச்சயம் இருக்கும். தெலுங்கானாவில் உள்ள நீர்நிலைகளை குடிநீருக்காக தமிழகத்துக்கு எப்படி கொண்டுவர முடியும்? சுற்றுலா துறையில் தமிழகம், தெலுங்கானா இடையே எப்படி இணைப்பு பாலம் ஏற்படுத்த முடியும்? அங்குள்ள முதலீடுகளை எப்படி தமிழகத்துக்கு, குறிப்பாக தூத்துக்குடிக்கு கொண்டுவர முடியும்? என சிந்தித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தொழில் அதிபர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் பல்வேறு நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story