ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்; சாதாரண நாட்களை விட 2 மடங்கு அதிகம்


ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்; சாதாரண நாட்களை விட 2 மடங்கு அதிகம்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:45 PM GMT (Updated: 13 Jan 2020 6:30 PM GMT)

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், சாதாரண நாட்களை விட 2 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

சென்னை, 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட ஏதுவாக சென்னையில் இருந்து பலர் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளனர். சிலர் முன்னதாகவே பயணத்தை மேற்கொண்டுவிட்டனர்.

பொதுவாக ரெயில் பயணத்துக்கு அடுத்ததாக பஸ்களில் பலர் பயணம் செய்கின்றனர். இதற்காக தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்கி வந்தாலும், சொகுசு பயணத்துக்காக ஆம்னி பஸ்களை பயணிகள் பலர் நாடி செல்கின்றனர்.

இதை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பண்டிகை காலத்துக்கு என்று ஒவ்வொரு முறையும் கட்டணத்தை அதிகரித்துவிடுகின்றனர். இதற்காக அரசும் ஒவ்வொரு முறையும் கண்துடைப்புக்காக பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பயணிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

அந்தவகையில் தற்போதும் ஆம்னி பஸ்களில் கட்டணம் சாதாரண நாட்களைவிட 2 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லைக்கு ஆம்னி பஸ்களில் சாதாரண நாட்களில் படுக்கை வசதி கொண்ட பஸ்களில் ரூ.1,200 வரை அதிகபட்சமாக கட்டணம் இருக்கும். ஆனால் தற்போது ரூ.2,500 வரை சில பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுதவிர இருக்கை வசதி கொண்ட பஸ்களில் சாதாரண நாட்களை விட ஒரு டிக்கெட்டுக்கு ரூ.400 முதல் ரூ.1,000 வரை கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றனர்.

அரசின் எச்சரிக்கை வெறும் பேச்சளவில் நின்றுவிடாதபடி, நடவடிக்கை தீவிரமாக இருந்தால் ஆம்னி பஸ்களில் இதுபோன்ற கட்டண கொள்ளை இருக்காது என்று பயணிகள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

அமைச்சர் எச்சரிக்கை

விபத்து, உயிரிழப்புகளை வெகுவாக குறைத்த மாநிலத்திற்கான விருதை டெல்லியில் பெற்றுக்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் 18004256151 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்னி பஸ்களுக்கு என தனியாக கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை. இருந்தாலும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கட்டணம் இருக்க வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

Next Story