தி.மு.க.வினர் இல்ல விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது; தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


தி.மு.க.வினர் இல்ல விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது; தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 13 Jan 2020 11:30 PM GMT (Updated: 13 Jan 2020 8:06 PM GMT)

தி.மு.க.வினர் இல்ல விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தமானில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு குறித்து தொண்டர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அந்தமானில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன் இல்லத் திருமணம். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான கருணாகரன் தி.மு.க. மீது தீவிரப் பற்று கொண்டவர். 35 ஆண்டுகளுக்கு முன் அந்தமானுக்கு சென்றபோதும், அங்கும் தி.மு.க. பற்று மாறாமல் இயக்கப் பணியாற்றுபவர். பற்று என்பதை விட வெறி என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவருடைய வேகம் அமைந்திருக்கிறது. கருணாகரன் மனைவி அணிந்திருக்கும் தாலி கூட உதயசூரியன் வடிவத்தில் தான் அமைந்திருக்கும் என்ற தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கவர்னர் உரை மீது எதிர்க்கட்சி தலைவர் ஆற்றிய உரைக்கு முதல்-அமைச்சர் பதில் சொல்லி உரையாற்றுகிற நாளில் தான் நான் அந்தமானில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்தேன். சட்டப்பேரவையில் தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணித்த கவர்னர் உரையில் இடம்பெற்றிருப்பதைத்தான் முதல்- அமைச்சர் தனது பதிலுரையில் தெரிவிக்கப்போகிறார். தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்ளும் அந்த உரையைவிட, தங்களை இயக்கத்திற்கு அர்ப்பணித்துக்கொண்டு கொள்கை வளர்க்கும் இத்தகைய தோழர்கள் நிறைந்திருக்கும் திருமண விழாவில் பங்கேற்பது பலனளிக்கக்கூடியது, மகிழ்ச்சி அளிக்க கூடியது என்பதால் தான் அந்தமான் நிகழ்வில் பங்கேற்றேன்.

திருமணம் என்பது இல்வாழ்க்கையின் இனிய சிறைவாசம் என்று சொல்வார்கள். தி.மு.க.வினரின் மணவிழாவை நடத்தி முடித்த பிறகு, அந்தமானில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க செல்லுலார் சிறைச்சாலையைப் பார்வையிடச் சென்றேன். முன்பே பல முறை அதனைப் பார்வையிட்டிருந்தாலும் ஒவ்வொரு முறையும் அது ஏற்படுத்தும் வீரமிக்க உணர்வினை மறந்திட முடியாது. எத்தனையெத்தனை வீரத் தியாகிகள் தங்கள் சொந்தச் சுகத்தை மறந்து, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக இந்த சிறையில் சித்ரவதைகளை அனுபவித்தார்கள் என்பது நினைவுக்கு வந்தது.

ஒரு தமிழ்க்குடும்பத்தினர், தங்களிடம் செல்போன் இல்லாத நிலையிலும், யாரிடமோ கேட்டுப்பெற்று, என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவர்களின் அந்த ஆர்வத்திற்கு காரணம், அவர்கள் குடும்பத்தில் தற்போது 7-ம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு பகுத்தறிவு எனப் பெயர் சூட்டியவர் கருணாநிதி. அந்த சிறுவன், குழந்தையாக இருந்தபோது, சென்னைக்கு அழைத்து வந்த குடும்பத்தினர், தலைவரைச் சந்தித்து பெயர் சூட்டச் செய்துள்ளனர்.

இங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் வாய்ப்பு இல்லாத காலத்தில், தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நம் தொண்டர்களே தமிழ் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ய அதில் அவர்களின் மனைவியார்களே ஆசிரியர்களாகி பாடம் நடத்தியதையும் நினைவுகூர்ந்தேன். அதன்பிறகே, 5-ம் வகுப்பு வரை தமிழ் கற்றுத்தர அரசு ஒப்புக்கொண்டதையும், தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தமிழ் கற்றுத் தந்தவர்களையே ஆசிரியர்களாக அரசு நியமித்த வரலாற்றையும் எடுத்துரைத்தேன்.

ஊக்கத்துடனும், உத்வேகத்துடனும் செயல்படும் அந்தமான் தி.மு.க.வினரின் உழைப்பும், அந்தமான் தமிழர்கள் கருணாநிதி மீது வைத்துள்ள பற்றும், உங்களில் ஒருவனான என் மீது காட்டுகின்ற உயர்வான அன்பும் கரையைத் தாலாட்டும் அலைகள் போல, இதயத்தின் கரைகளில் மோதி எதிரொலி எழுப்பிக்கொண்டே இருக்கின்றன.

அவை மேலும் அதிகமாக உழைத்திடவும், மறைமுக தேர்தல் மூலமாக ஜனநாயகத்தை படுகொலை செய்து பச்சை ரத்தம் பரிமாறுகின்ற ஆட்சியாளர்களை நேரடியாகவும், வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தி, தமிழகத்தை காலத்தே மீட்டிடும் வலிமையைப் பன்மடங்கு பலப்படுத்தவும், உறுதிமிக்க உந்துசக்தியாக உங்களின் உழைப்பு அமைந்துள்ளன என்றால் மிகையில்லை.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். 

Next Story