காவல், தீயணைப்பு, சிறைத்துறையை சேர்ந்த 3,186 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


காவல், தீயணைப்பு, சிறைத்துறையை சேர்ந்த 3,186 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2020 9:00 PM GMT (Updated: 14 Jan 2020 8:27 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி, 3,186 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சென்னை, 

பொங்கல் பண்டிகையையொட்டி, 3,186 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் பதக்கம்

தமிழக காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்-அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டு, காவல் துறையில்(ஆண்/பெண்) காவலர் நிலை-1, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3,000 பணியாளர்களுக்கு ‘தமிழக முதல்-அமைச்சரின் காவல் பதக்கங்கள்’ வழங்கப்படுகின்றன. மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுனர் கம்மியர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அதிகாரிகளுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை வார்டர்கள் (ஆண்/ பெண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்(பெண்) நிலைகளில் 60 பேர்களுக்கு ‘தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்கப்படுகின்றன.

பதக்கம் மற்றும் பதக்கச்சுருள்

மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400, 2020 பிப்ரவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்-அமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.

இது தவிர, காவல் வானொலி பிரிவு, நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 6 பேர்களுக்கு ‘தமிழக முதல்-அமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படுகிறது. இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும். இதற்கென நடைபெறும் சிறப்பு விழாவில் முதல்- அமைச்சரால் பதக்கம் மற்றும் பதக்கச்சுருள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story