தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் பாதிப்பு இல்லை துரைமுருகன் பேட்டி


தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் பாதிப்பு இல்லை துரைமுருகன் பேட்டி
x
தினத்தந்தி 16 Jan 2020 11:00 PM GMT (Updated: 16 Jan 2020 9:04 PM GMT)

‘தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை.

வேலூர், 

‘தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை. அவர்களை போகாதே, போகாதே என்று ஒப்பாரி வைக்கவேண்டிய அவசியமும் இல்லை’ என்று துரைமுருகன் கூறினார்.

தொண்டர்கள் சந்திப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி காட்பாடியில் தி.மு.க. சார்பில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன், கதிர்ஆனந்த் எம்.பி., ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டணி தர்மம்

அ.தி.மு.க. ஆட்சியில் கிராமங்கள்தோறும் விளையாட்டு மைதானம் அமைப்பதாகக்கூறி அவர்களே பணத்தை எடுத்துக்கொள்வார்கள். அதற்காகத்தான் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். அதேபோன்று ஏரிகளை தூர்வாருகிறேன் என்று கூறி, ஏரி மண்ணை விவசாயிகளை எடுத்துக்கொள்ள சொன்னார்கள். அவர்களும் எடுத்துச் சென்றனர். இப்போது தூர்வாரியதாக பணத்தை எடுத்துக் கொண்டனர். இந்த ஆட்சியில்தான் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது.

தி.மு.க. கூட்டணியில் ஒரு தர்மத்தை கடைபிடித்து வருகிறோம். யாரையும் நாங்களாக வெளியேற்றுவது இல்லை என்பதுதான் அது. அதற்காக அவர்களாக போனால், ‘போகாதே, போகாதே என் கணவா...’ என்று ஒப்பாரி வைக்கவேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை.

பாதிப்பு இல்லை

எங்கள் கூட்டணியில் இதுவரை எத்தனையோபேர் இருந்துள்ளனர். வெளியேறியும் சென்றுள்ளனர். அதற்காக தி.மு.க. எப்போதும் வருத்தப்பட்டது இல்லை. காங்கிரஸ் விலகிச்சென்றால் எங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. அவர்களுக்கு ஓட்டுவங்கி என்று ஒன்று இருந்தால்தானே பாதிக்கப்படுவதற்கு.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story