"திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை" -ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு கே.எஸ்.அழகிரி பேட்டி


திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை -ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 18 Jan 2020 8:22 AM GMT (Updated: 18 Jan 2020 8:22 AM GMT)

திமுக தலைவர் ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு திமுக -காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என கே.எஸ்.அழகிரி கூறினார்.

சென்னை,

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் உள்ளாட்சித் தேர்தலில் பதவிகள் வழங்குவதில் திமுக கட்சியினர் கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இதனை திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலுவும் கூறி இருந்தார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் எங்களுக்கு என்ன நஷ்டம்?, அவர்களுக்கு ஓட்டு வங்கி இல்லை என கூறினார்.

இதற்கு காங்கிரஸ் எம்.பிக்கள் கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மு.க.ஸ்டாலினை இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  சந்தித்தார்.

அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 12 மணிக்கு மு.க.ஸ்டாலினை  காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்தார். அவருடன் கே.வீ.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.

பின்னர் பேட்டி அளித்த  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  நிருபர்களிடம் கூறியதாவது;-

திமுக -காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. திமுக காங்கிரசுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி பேசினோம். 2021-ம் ஆண்டு தேர்தலிலும் அதற்கு பின்பும் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடரும்.

கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். திமுக கூட்டணியை அதிமுக கூட்டணியுடன் ஒப்பிட முடியாது. எங்கள் கூட்டணி கொள்கை  ரீதியான கூட்டணி. துக்ளக்குடன் முரசொலியை ரஜினிகாந்த் ஒப்பிட்டது தவறு. காங்கிரஸ் தலைமை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளது. தனித்து நிற்க எந்த கட்சிக்கும் செல்வாக்கு இல்லை என கூறினார்.

Next Story