2 குழந்தைகளுடன் எதிரே வந்த பெண்ணை முட்டாமல் தாவி சென்ற காளை சமூக வலைத்தளங்களில் பரவும் பரபரப்பு காட்சிகள்
சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டில் பாய்ந்து வந்த காளையின் எதிரே 2 குழந்தைகளுடன் பெண் சிக்கினார்.
திருப்பத்தூர்,
சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டில் பாய்ந்து வந்த காளையின் எதிரே 2 குழந்தைகளுடன் பெண் சிக்கினார். ஆனால் அந்த காளை அவர்களை முட்டாமல் தாவி சென்ற பரபரப்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
சிராவயல் மஞ்சுவிரட்டு
பொங்கலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் சிராவயலில் நடத்தப்படும் மஞ்சுவிரட்டு புகழ்பெற்றதாகும். அங்கு இந்த ஆண்டுக்குரிய மஞ்சுவிரட்டு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறும் திடலில் கூடியிருந்தனர்.
அந்த திடலில் ஆங்காங்கே காளைகளை அவற்றின் உரிமையாளர்கள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விட தொடங்கினர். இளைஞர்கள் ஆர்வத்துடன் விரட்டி சென்று காளைகளை அடக்க முயன்றனர்.
பாய்ந்து வந்த காளை
இந்தநிலையில் அந்த திடலில் கைக்குழந்தை மற்றும் சிறுவனான மற்றொரு மகனுடன் தாய் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அவிழ்த்து விடப்பட்ட வெள்ளை நிற காளை ஒன்று அசுர வேகத்தில் பார்வையாளர்களை மிரட்டியவாறு பாய்ந்து வந்தது.
2 குழந்தைகளுடன் எதிரே நடந்து வந்த பெண்ணை நோக்கி அந்த காளை ஓடியது. இதனால் பதறிய அவர் அந்த காளையிடம் தப்பிப்பதற்காக குழந்தைகளுடன் தரையில் படுக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த காளை சட்டென தனது வேகத்தை குறைத்துக்கொண்டு குழந்தைகளுடன் படுத்த அந்த பெண்ணை ஒன்றும் செய்யாமல் அவர்களை தாண்டி பாய்ந்து சென்றது.
வலைத்தளங்களில் பரவுகிறது
இதனால் அவர்கள் 3 பேரும் எவ்வித காயமும் இல்லாமல் உயிர் தப்பினர். இந்த காட்சியை அங்கு வேடிக்கை பார்த்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். இந்த காட்சிகள் தற்போது வேகமாக பரவி அனைவரையும் பார்க்க வைத்துள்ளது.
Related Tags :
Next Story